Thursday, December 31, 2009

நமது நாட்டில்

சிறு பெண்ணைக் கற்பழித்த காரணத்தால்
சிறு தண்டனை அளித்த நீதிபதி
பெருங் காவலராய் இருந்த ரத்தோர் என்னும்
பீடையினைக் கொல்வதன்றி வழக்கு ஏனோ?
சரியான தண்டனையை அளிக்கா அந்த
சரித்திரத்து நீதிபதி தன்னைச் சேர்த்து
உரிக்காமல் விடுவதுவே கயவர்க்கெல்லாம்
உற்சாகம் தருகிறது நமது நாட்டில்

Tuesday, December 29, 2009

பேசுதற்கும் ஏசுதற்கும்

வாரிசுகள் வருகின்றார் அரசியலில்
வந்தவுடன் பதவிகளில் அமருகின்றார்
ஊரிசைய பலகாலம் உழைத்தவரோ
ஒரத்தில் நிற்கின்றார் அந்தோ பாவம்
நேரிடையாய் ஒரு கேள்வி அவரிடத்தில்
நெஞ்சிருந்தால் இப் பதவி ஏற்பீரோ நீர்
ஊரறிய பட்டங்கள் பெற்று உள்ளீர்
உயர் கல்வி உமக்கிதனை உணர்த்தலையோ


உழைத்தழிந்து போனவரின் உடைமையினை
ஊரறியத் திருடுகின்றீர் உள்ளமற்றீர்
பிழைக்கின்ற கல்வியினைப் பெற்று உள்ளீர்
பேரறிவுக் கல்வியினைப் பெற்றிருந்தால்
இழைப்பீரோ இக் கொடுமை நாணி நிற்பீர்
ஏற்பீரோ பொறுப்பை யெல்லாம் வெட்கம் கொள்வீர்
பிழைப்பு இந்தப் பிழைப்பு உம்மை உலகம் எல்லாம்
பேசுதற்கும் ஏசுதற்கும் வழிகள் செய்யும்

Wednesday, December 23, 2009

கொண்டாரில்லை

பாரதியின் பாடலது துக்கடாவாம்
பார்த்தீரோ தமிழர்களே வன் கொடுமை
ஊரறிய ஆட்சி செய்வோர் தமிழுக்காக
உயிர் கொடுப்போம் என்பவர்கள் கேட்பாரில்லை
ஆர் கேட்பார் இவர்களையே ஆடுகின்றார்
அன்னை தமிழ் இசை அரங்கில் ஒழிகின்றது
ஊர் நிறைந்த செய்தித் தாள் ஊடகங்கள்
ஒருவருமே தமிழ் உணர்வு கொண்டாரில்லை

Tuesday, December 22, 2009

இவரையெல்லாம்

இசை நிகழ்ச்சி எங்கெங்கும் நடக்கின்றது
இசை மொழியாம் தமிழை அது பழிக்கின்றது
வசையாக்கி தமிழ்ப் பாடல் தன்னையெல்லாம்
வாயார துக்கடா என் றழைக்கின்றது
திசை தோறும் வென்று நின்ற தமிழாம் தாயை
தேடி நந்தம் அரசியலாய்க் கொண்டாரெல்லாம்
உசிரோடே இருக்கின்றார் கேட்டாரில்லை
உயர் தமிழே கேட்பாயா இவரையெல்லாம்

Sunday, December 20, 2009

உள்ளார்

பணம் ஒன்றே வாழ்க்கை என்று காட்டி தம்மின்
பகட்டான வாழ்வதனால் மனம் கெடுத்து
குணம் கொள்கை என்பதெல்லாம் என்றும் எங்கும்
கோடிகளைக் குவிப்பதுவே என்று காட்டி
நிணம் தசை நார் எல்லாமே கையூட்டுக்காய்
நிதம் தந்து வாழ்கின்ற தலைவர் கண்டால்
குணம் வருமோ குல மானம் வருமோ இங்கே
கொள்ளை ஒன்றும் தவறில்லை என்றே கொள்வார்


தினம் தோறும் கைதாவார் கையூட்டுக்காய்
தேசமெங்கும் காவலர்கள் அலுவலர்கள்
பிணம் தின்னும் அரசியலார் கொள்ளையெல்லாம்
பேச்சோடு நிற்கிறது கைதே இல்லை
குணம் கொண்ட காந்தி மகான் காமராசர்
குல மானம் கொண்ட கக்கன் ஜீவா என்னும்
இனத்தின் பேர் சொல்பவரும் அன்றோ இந்த
இழிவான கூட்டத்தினுள்ளே உள்ளார்

Tuesday, December 15, 2009

குறளைக் கற்றார்

கொள்ளைகளை அடிப்பதிலே கொஞ்சம் கூட
கூச்ச நாச்சம் இல்லாமல் அடிக்கின்றாரே
கூட்டம் போட்டு மேடையிலே ஏழையென்றும்
கொள்கையென்றும் நாணமின்றி நடிக்கின்றாரே
வெள்ளை உள்ளம் தன் உள்ளம் என்று எல்லாம்
விரிக்கின்றார் கதைக்கின்றார் புளுகுகின்றார்
தெள்ளு தமிழ் அன்னையவள் குறளைக் கற்றார்
திகைக்கின்றார் துடிக்கின்றார் இவரைக் கண்டு

Monday, December 14, 2009

நம்பாதார்

ஏழைக்கு உதவாதார் கடவுளின் முன்
எப்படிப் போய் நிற்பாரோ தெரியவில்லை
நாளைக்கு எனச் சேர்த்து வாழ்வார் தம்மை
நாயகனும் சேர்ப்பானோ அடி அளித்து
கோழைகளாய் வாழ்கின்றார் பயந்து போயே
கொள்ளைகளும் அடிக்கின்றார் அந்தோ பாவம்
ஏழைகளைக் காவாதார் என்றால் அவர்
இறைவனையே நம்பாதார் என்றே கொள்வோம்

Friday, December 11, 2009

ஆடுகின்றார்

பாரதிஎன் றொருகவிஞன் பிறந்தான் இன்று
பழந்தமிழைப் புதுத் தமிழாய்ப் புதுக்குதற்கு
ஊரதிரப் பெண்களுக்காய்க் குரல் கொடுத்தான்
ஊத்தைக் கற்பெனும் அந்தப் பெயரொழித் தான்
நீரறிவீர் தமிழை அவன் தந்தது போல்
நிலவுலகில் தந்தவர்கள் யாரும் இல்லை
யாரறிவார் இன்று இந்தத் தமிழுலகில்
யார் யாரோ ஆடுகின்றார் கவிஞர் என்று

Tuesday, December 8, 2009

என்றும் எங்கும்

முனிந் தனைத்தும் ஒதுக்கி வனத்துள்ளே சென்று
முதல்வனையே நினைத் திருப்பார் முனிவர் ஆவார்
நினைந் தனைத்தும் உணர்ந் திருந்தும் சொத்தைக் காக்க
நிறைவான மடத் தலைவர் ஊரில் உள்ளார்
தினந் தினமும் நமக்கெல்லாம் புத்தி சொல்லி
தேற்று கின்ற சாமியார்கள் வலம் வருவார்
அனந் தன் அவன் ஆண்டவனோ இவர் ஒதுக்கி
அருளி நிற்பான் நமக் கென்றும் என்றும் எங்கும்

Saturday, December 5, 2009

வணங்கி நிற்போம் விவேகாநந்தர்

அழுதழுது துன்பத்தில் பெண்கள் வாழும்
அவ் வீடும் அந் நாடும் அழிந்தொழியும்
பழுதற்ற தாய்மை யென்று பெண்ணைப் போற்றும்
பாரதத்தில் பிறந்தீரே இதை உணர்வீர்
தொழுவதற்கு தாயன்றி வேறோர் தெய்வம்
தூயவரே இல்லையென்று வேதம் சொல்லும்
விழுதாகி அனைத்தையுமே தாங்கி நிற்கும்
வீரர் அவர் அவர்களையே வணங்கி நிற்போம்

வள்ளுவரும் விவேகாநந்தரும்

உயிரோடு இருப்பாரை சவக் கிடங்கில்
உள்ளாராய்க் காணுகின்றார் வள்ளுவரும்
துயர் தீர்த்து அடுத்தவர்க்கு உதவி செய்யும்
தூய மனம் இல்லாரை செல்வம் சேர்த்து
அயராமல் அப்பணத்தைக் காத்து நிற்கும்
அன்பில்லா மனிதர்களை சவங்கள் என்றார்
உயர்வான இக் கருத்தை விவேகாநந்தரும்
உரைக்கின்றார் சுய நலமே மரணம் என்று

Monday, November 30, 2009

சுவாமி விவேகாநந்தர்

தீண்டாமைக் கொடுமையினை நெஞ்சுள் வைத்துத்
தெய்வத்தின் பெருமையினை சொல்வார்தம்மை
தீண்டாமல் இறைவன் அவன் தூர வைப்பான்
தெய்வத்தின் படைப்பன்றோ அனைவருமே
ஆண்டவனைக் கண்டவர் போல் நடிப்பார் எல்லாம்
ஆபாசம் ஆபாசம் என்றே சொல்வேன்
வேண்டுதலை விரும்பவில்லை ஆண்டவனும்
வினையாற்றி வினையாற்றி வெல்லச் சொன்னான்

Sunday, November 29, 2009

தம்மைக் காக்க

அங்கவையைச் சங்கவையை திரைப் படத்தில்
அசிங்கமாய்க் காட்டி நின்றார் கோபமில்லை
ஆத்திச் சூடி அவ்வை தன்னை திரைப் படத்தில்
ஆட்டம் போட்டுக் கேலி செய்தார் வெட்கமில்லை
தங்க மகள் கண்ணகியை குத்துப் பாட்டில்
தடித்தனமாய்க் காட்டுகின்றார் பொங்கவில்லை
இங்கு உள்ளார் தமிழ்த் தலைவர் பல பேர் இன்றும்
இனமானம் பேசி நிற்பார் தம்மைக் காக்க

சிரித்து நிற்பார்

இரண்டு பக்கக் கதை அன்று பொன்னகரம்
இன்று வரை உயிரோடு இருக்கின்றது
மிரண்டதன்று தமிழுலகம் புதுமைப் பித்தன்
மீட்டெடுத்தார் தமிழ்க் கதையைப் பெருமையுற்றோம்
வறண்டு போய் பல பக்கம் எழுதுகின்றார்
வாழ்த்துகின்றார் அவரையுமே பெரியர் என்று
நிறைந்த நல்ல தமிழறிஞர் இவர்களையே
நெஞ்சினிலே கொள்வதில்லை சிரித்து நிற்பார்

Saturday, November 28, 2009

தியாகத் திருநாள்

இறைவனது கட்டளையை தலைமேலேற்று
இனிய மகன் தனை அறுக்க மனமுவந்த
சிறந்து நின்ற இபுராஉறிம் தன் வழியாய்
செய்தி சொன்னார் இறைவனுமே மிகச் சிறப்பாய்
உளம் நிறைய இறைவனையே கொண்டு உள்ளார்
உயர்ந்து நிற்பார் இறையருளைக் கொண்டு நிற்பார்
தனை மறந்து இறைவனையே நினைவாய்க் கொண்டு
தான் நிற்பார் வென்று நிற்பார் தியாகமாவார்

Thursday, November 26, 2009

விடத்தான் சொன்னார்

ஆசை வைத்தோம் இறைவன் மேல் அதனாலேதான்
ஆளாளுக் கொரு பெயரில் வணங்குகின்றோம்
பூசை வைத்தோம் அதில் கூட இறைவனிடம்
புத்தியற்று எது எதையோ கேட்டு நின்றோம்
வீசு புகழ் வள்ளுவரும் தமிழும் இங்கே
வேண்டாத ஆசைகளை விடுவதற்காய்
தேசு கொண்ட ஆண்டவரைப் பற்றச் சொன்னார்
தெய்வப் பற்று அதனையுமே விடத் தான் சொன்னார்

Wednesday, November 25, 2009

காக்க வேண்டும்

மதம் காட்டிப் பிழைப்பவர்க்கு மானம் இல்லை
மதியில்லை மனிதர் என்னும் நினைப்பு மில்லை
இதம் காட்டி மதம் சொல்வார் சொல்லிச் சொல்லி
இடையினிலே பேதங்கள் ஊட்டிடுவார்
விதம் விதமாய்க் கதை சொல்வார் அனைத்தும் இங்கே
வினையாகி மனிதத்தை அழித் தொழிக்கும்
மதம் பிடித்து ஆடுகின்ற அவரைக் கண்டு
மருந்தளித்துக் கரை சேர்த்துக் காக்க வேண்டும்

துவக்கும்

மதத் தலைவர் அனைவருக்கும் எங்களது
மாபெரிய விண்ணப்பம் அய்யா அய்யா
சிதைத்திங்கு மனித குலம் அழிப்பதற்காய்
செயல்பட்டு நிற்கின்ற ஆட்சியாளர்
விதம் பலவாய் நாடு தோறும் ஆடுகின்றார்
வேதனைகள் விளைக்கின்ற அவரையெல்லாம்
பதம் செய்து திருத்துகின்ற வேலையினைப்
பாங்குடனே நீர் செய்தால் என்ன அய்யா


போதனைகள் போதனைகள் அந்தோ அந்தோ
போதுமய்யா போதுமய்யா தாங்க மாட்டோம்
வேதனைகள் வேதனைகள் தீர்ப்பதற்கே
வேண்டுமய்யா உங்களது அருளும் அன்பும்
சாதனைகள் என்பதுவே மற்றவரைச்
சரிப்பதுவும் ஒழிப்பதுவும் என்று ஆடும்
பேதைகளை மதத்தினின்று விலக்கும் பின்பு
பெரும் போரை அவர்க் கெதிராய்த் துவக்கும்

இயலாராகி

ஆங்கிலத்துப் பள்ளிகளில் தங்கள் வீட்டு
அருமை மிகு பிள்ளைகளைச் சேர்த்து விட்டு
தாய் மொழியின் பெருமைகளை மற்றவர்க்கு
தடித்தனமாய்ப் போதிக்கும் தாக்கரேக்கள்
ஒங்கி இங்கே நிற்பதனைப் பார்த்துக் கொண்டு
ஊமையாய் இருக்கின்ற ஆட்சியாளர்
தாங்குகின்றார் தங்களது பதவிகளைத்
தடுத்தவரைத் தண்டிக்க இயலாராகி

உமக்கு வாய்க்கும்

என் ஜாதி தனைச் சொல்லி துணிக்கடைக்குள்
எனக்கு ஒரு வேட்டி வேண்டும் என்று கேட்டேன்
என் ஜாதித் தோட்டத்துப் பருத்தி தன்னில்
என் ஜாதி நூற்றிட்ட நூலைக் கொண்டு
என் ஜாதி நெய்திட்ட வேட்டி ஒன்று
எப்படியும் வேண்டும் என்று கேட்டு நின்றேன்
மென்னகையில் கடைக்காரர் சொன்ன பதில்
மேன்மை மிகு அம்மணமே உமக்கு வாய்க்கும்

Tuesday, November 24, 2009

இறைவன் இல்லை

கடவுளினை உண்மையென்று கருதுவார்க்குள்
கட்டாயம் மோதல் இல்லை சண்டை இல்லை
மடமையினைக் கொண்டார்க்கு மத்தியில் தான்
மதச் சண்டை இனச் சண்டை சாதிச் சண்டை
இடம் அனைத்தும் கடவுளவன் இடம் தான் என்று
எவர் உணர்ந்து உள்ளாரோ அவர்கள் என்றும்
தடம் மாறிப் போவதில்லை தேர்தலுக்காய்
தன் மதத்தைக் காட்டி நிற்பார்க்கு இறைவன் இல்லை

Saturday, November 21, 2009

என் மதம்

ஆதரவற்று எங்கோ தெருவோரத்தில்
அழுது கொண்டிருக்கின்ற நாயதற்கு
தேடிச் சென்று ணவளித்து காத்தல் ஒன்றே
தெளிவான என் மதம் ஆம் உணர்வீர் நீரே
கோடிக் கணக்கான பணத்தைச் சேர்த்து
கோயில் கட்டும் கொள்ளையர் தம் கோயிலுக்குள்
நாடி நிற்கும் ஆண்டவனார் வரவே மாட்டார்
நமக்குரைத்தார் துறவி விவேகானந்தருமே

Sunday, November 8, 2009

பதிலைத் தாரும்

கோடிகளுக்கு எல்லையிட்டு அவர்கள் தம்மின்
கொள்ளைகளைத் தடுத்தவர் தம் ஆலைகளை
வாடி நிற்கும் ஏழை குலத்திளையோர் தம்மின்
வசம் தந்து அவர் தம்மின் திறமை கொண்டு
தேடி என்றும் வேலை இன்றி அலையும் ஏழை
திரள் தன்னை முழுதாக உழைக்க விட்டால்
கேடு என்ன வந்து விடும் தலைவர்களே
கேட்கின்றேன் வெட்கமின்றிப் பதிலைத் தாரும்

பெற்று உள்ளார்

தனியாக வென்றவர்கள் தமக்கு எல்லாம்
தன்னுடைய அமைச்சர்களாய் இடமளித்து
அரியானா மாநிலத்தின் முதலமைச்சர்
அப்படியே மாநிலத்தைக் காத்து உள்ளார்
இனிப்பான செய்தி இது ஆமாம் ஆமாம்
இரு பெரிய இயக்கங்களுக்கு இடையில் நின்று
தனியாக வென்றாலே அவர்கள் தானே
தம் மக்கள் செல்வாக்கைப் பெற்று உள்ளார்

Saturday, November 7, 2009

சிரிப்பாரே

வள்ளுவர் என்றொரு அறிவுக் கொழுந்தை
வடிவாய்ப் பயந்தாள் தமிழ் அன்னை
உள்ளுவதெல்லாம் உயர்வாய் எண்ண
உலகப் பொதுமறை அவர் தந்தார்
எள்ளி நகையாட ஒழுக்கம் இன்றி
எப்படி யெல்லாம் வாழ்கின்றோம்
வள்ளுவர் நமது சொந்தம் என்றால்
வாய்விட் டனைவரும் சிரிப்பாரே

ஒன்றாவீர்

வணங்கும் விதங்கள் வெவ்வேறாய்
வணங்குகின்றீர் புரிகின்றோம்
வணங்கி நிற்றல் கடவுளையே
வடிவாய் அதையும் உணர்கின்றோம்
பிணக்கெதற்கோ உங்களுக்குள்
பெரியீர் அதுதான் புரியவில்லை
கணக்கு வழக்கு மதம் தானோ
கடவுள் புரிந்தீர் ஒன்றாவீர்

Friday, November 6, 2009

மொழிதான் ஏது?

முல்லைப் பெரியாறா மலையாளிகள்
முடக்குகின்றார் முடக்குகின்றார் அய்யோ அய்யோ
கள்ளத்தனமாகக் காவிரியைக்
கன்னடர்கள் தடுக்கின்றார் அய்யோ அய்யோ
சொல்வோரே இயற்கையினை அழித்தழித்து
சொத்துக்கள் சேர்க்கையிலை நினைத்தீரோ நீர்
கள்ளத்தனச் சொத்துச் சேர்க்கச் சேர்க்க
கண்மூடித் தனமாக இயற்கை கொன்றீர்


அள்ளிக் கொடுக்கின்ற இயற்கையினை
அவமதித்து கோடிகளை அள்ளிக் கொண்டீர்
சுள்ளியாகிக் காடுகளும் வெம்மையிலே
சுடுகாடாய் ஆவதற்கு வழிகள் செய்தீர்
எள்ளி நகையாடும் எதிர் காலம் உம்மை
என்ற எண்ணம் உமக்கேது வெட்கம் ஏது
கள்ளர்களே உம்மைப் போல் கயவர்கள்தாம்
கன்னடத்தில் மலை நாட்டில் பல பேர் உள்ளார்


எல்லோரும் ஆங்காங்கே இயற்கை கொன்று
இல்லத்தில் அலங்காரம் செய்தே வாழ்வீர்
வல்லானாம் இறை தந்த இயற்கையினை
வல்லடியாய்க் கொள்ளைகொண்டீர் குறை சொல்லாதீர்
கொல்கின்றீர் மனித குலம் பணத்தாசையால்
குடும்பத்தோ டழிவீர் நீர் இறைவன் கொல்வான்
சொல்லாதீர் மொழி பேதம் கொள்ளையர்க்கு
சொந்தமாய் நாடேது மொழிதான் ஏது?

Friday, October 30, 2009

வீணே ஆழிகின்றார்

உயிருக்குயிரே அன்பு என்று உணர்த்தி நின்றார் வள்ளுவரும்
உணரா மனிதர் பணத்தைத் தேடி ஒடி ஒடி அலைகின்றார்
பயிருக்குயிரே மழை என்பதனைப் பாரோர் அனைவரும் அறிந்திருந்தும்
பசுமைக் காட்டை அழித்து அழித்துப் பாழாய் தமையே அழிக்கின்றார்
வயலும் காடும் இல்லா வாழ்வு வாழ்வாகிடுமோ உயிர்கட்கு
வருத்தம் இன்றி மேலும் மேலும் வயல்கள் அழித்து ஒழித்தீரே
துயில வீடு கட்டும் மாந்தர் துயரே சேர்த்து வாழ்கின்றார்
தூய்மை அழிக்கும் யந்திர வாழ்வின் துணையில் வீணே அழிகின்றார்

Monday, October 26, 2009

உங்க மக்க

அமைச்சர் பெருமானை வணங்குகின்றோம்
அடிக்கடி நீர் தொகுதிக்கு வருதல் வேண்டும்
குமைச்சல் இன்றி மின்சாரம் கிடைப்பதற்கும்
குண்டு குழிச் சாலையெல்லாம் மின்னுதற்கும்
சமைச்ச சோறு ஏழைகட்குக் கிடைப்பதற்கும்
சரியாக இலவசங்கள் பெறுவதற்கும்
அமைச்சர் அய்யா மீண்டும் மீண்டும் வாங்க அய்யா
அன்போடு அழைக்கின்றோம் உங்க மக்க

Friday, October 23, 2009

சூர சம்காரம்

சூரர்கள் அழிக்கும் கூட்டத்திற்குள்
சூரர்கள் ஆயிரம் இருக்கின்றாரே
நீரறிவீரே நெற்றிக் கண்ணின்
நேர்மைப் பொறியில் உருவானவரே
பேரறிவாளா இவரை அழித்தல்
பெருமை இல்லை என நினைத்தீரோ
ஊரகம் முழுதும் சேவல் மயிலாய்
உரு மாறிடும் எனும் அச்சம் தானோ

எந்தக்காலம்

சிலைகளுக்குள்ளே தலைவர்கள் இல்லை
சிறந்த அவர்தம் கொள்கைகள் இல்லை
கலகம் செய்தே வாழ்ந்திட நினைக்கும்
கண்ணியமற்றோர் கைகளில் சிலைகள்
விலை உணராத ஏழைகள் ஆங்கே
வீழ்ந்தே இறப்பர் சிலைகளுக்காக
சிலைகளை அகற்றிக் கொள்கைகள் ஏற்று
சிறக்கப் போவது எந்தக் காலம்

Tuesday, October 20, 2009

திருவடி கிடந்தேன்

ஆறுதல் தேடி வருபவர் தமக்கு
ஆறுதல் தருவதில் மகிழ்ந்தேன்
அழுகையில் விழுந்து அரற்றுவார் தமக்கு
அழுகையின் மகத்துவம் உரைத்தேன்
தேறுதல் தேடி வருபவர் தமக்குத்
தேறுதல் தருவதில் தெளிந்தேன்
திசைகளைத் தேடியே திணறுவார் தமக்குத்
திசைகளை உணர்த்தியே உணர்ந்தேன்
மாறிடும் உலகினில் நல்லன எல்லாம்
மற்றவர்க்கு உரைத்திடப் படைத்தான்
மனமெலாம் உறையும் எனதருங் கடவுள்
மகிழ்ந்தவன் திருவடி கிடந்தேன்

Saturday, October 17, 2009

தீபாவளித்திருநாள் 4

அதிகார
வர்க்கத்தை
ஆட்சியாளர்களை
அடிமைகள்
வணங்கும்
நாள்

தீபாவளித்திருநாள் 3

ஏழையர்க்குத்
தேம்பும்
வலித்
திருநாள்

தீபாவளித் திருநாள் 2

கார்ப்போரேசன்
குழாயும்
கங்கையாகும்
நன்னாள்

தீபாவளித் திருநாள்

ஆண் குழந்தை
என்பதால்
கள்ளிப் பால்
கொடுக்காமல்
வளர்த்து
அரக்கனாக்கி
தந்தை
உதவியுடன்
தாய்
கொன்ற
நாள்

Friday, October 16, 2009

வெடிக்குமோ

வெடி
செய்யும்
குழந்தைகள்

வெடிப்பது
தொழிற் சாலை
வெடித்தால்
தான்

தீபாவளி

முன்னும்
கவலை

பின்னும்
கவலை

நடுவில்
ஒரு
நாள்

தீபாவளி


வா மீத முலைநூலில் இருந்து

Sunday, September 20, 2009

எந்தன் மதம்

பாவங்கள் தீர்ப்பதற்காய் இராமேஸ்வரப்
பவித்திரமாம் தீர்த்தத்தில் குளிப்பார்தம்மை
பாவத்தில் மேலும் ஒன்றைக் கூட்டிக் கொண்டார்
பாவியவர் என்கின்றார் விவேகானந்தக்
காவியுடை வேந்தரவர் மேலும் சொல்வார்
கவனிக்க ஆளற்றுக் கிடக்கும் நாயின்
தேவையதைப் பசியதனை தீர்ப்பதுவே
தெரிகின்ற நல்ல மதம் எந்தன் மதம்

Wednesday, September 16, 2009

ஆண்கள் குலம்

பெண்ணென்றால் சமைப்பதற்கு துவைப்பதற்கு
பேசுதற்கோ கலப்பதற்கோ இல்லையென்னும்
மண்ணுலக மூடர்களைக் காணுகையில்
மனமிங்கே கொதிக்கிறது துடிக்கிறது
கண்களைப் போல் பெண்களென்று மேடை தோறும்
கதைப்பதற்குத் தெரிகின்றது வேறு என்ன
புண்கள் இந்த ஆடவர்கள் இவர்களாலே
புகழிழந்து நிற்கிதிங்கு ஆண்கள் குலம்

ஒழிய வேண்டும்

மாபெரிய தமிழ் நடிகை சிவாஜி அண்ணன்
மனமாரப் போற்றுகின்ற பெரு நடிகை
யாரெனினும் வணங்கி நிற்கும் ஆச்சி அம்மா
எங்களது மனோரமா பெண்களுக்காய்
பேசுகின்றார் சரியான நேரந்தன்னில்
பெரிய தெய்வம் அவர் தன்னைக் காக்க வேண்டும்
கூசுதிங்கு ஆடவரின் கொடுமை அய்யோ
கூறுகின்றார் அதையே தான் மனோரமா ஆச்சி


ஆண்மை யற்றுப் போன பல ஆடவர்கள்
அதை மறைத்துப் பெண்களினை மணமும் செய்யும்
கேடு கெட்ட செயலதனை மனோரமா ஆச்சி
கிளர்ச்சி செய்து தடுக்க என்று கிளம்புகின்றார்
வான் புகழ மண் புகழ போராட்டத்தில்
வாகை சூட வேண்டுமவர் வாழ்த்துகின்றேன்
தேனிதழின் பெண்களினை உணர்ச்சிகளைத்
தீய்க்கின்ற இக்கொடுமை ஒழிய வேண்டும்

Sunday, September 13, 2009

எதிர்த்திடுவோம்

உடன் வாழ வந்தவனோ உடலை மட்டும்
உறவென்று கொண்டவனாய் வாழ வந்தால்
உடல் நாணத் துன்புறுவார் பெண்கள் அய்யோ
உணர்ந்தாரா இல்லையே ஆண்கள் இங்கு
மனம் நாடிப் பேசாராய் அன்பு செய்து
மணம் கொண்ட பண்பாராய் இல்லார் விட்டு
தனை உணர்ந்த நல்லவனைத் தேடி வாழ்ந்தால்
தவறாமோ அதுவேதான் நல்ல காதல்


காதலென்றால் நல்லதென்று உணரார் தானே
கள்ளத்தைக் காதலிலே சேர்க்கின்றாரே
வேதனையை வாழ்க்கையென்று உணர்ந்த பின்னர்
விரும்பாத பேயோடு வாழ்தல் விட்டு
கோதி நன்கு அரவணைத்து அன்பு செய்து
கொஞ்சி மனக் கோயிலுக்குள் வைத்துப் போற்றும்
பாதி எல்லாம் பாதி என்று புரிந்து வாழப்
பழகியவர் தன்னோடு வாழ்தல் காதல்


ஒடி விட்டாள் என்கின்றார் எங்கே அன்பை
உதவாதார் தனை விட்டு ஒடல் நியாயம்
கூடி விட்டாள் என்கின்றார் நல்ல நட்பைக்
கொண்டாடிக் காதல் செய்யும் நல்லவரைப்
பேடியைப் போல் அவர் தனையே கள்ளக் காதல்
பேணியவர் என்று சொல்லும் அறியார் தம்மைக்
கூடி நாமும் எதிர்த்திடுவோம் கொடுமையாக
கூச வைக்கும் பேச்சினையே எதிர்த்திடுவோம்

இருக்கின்றன

சென்னையில்
இன்னும்
புறாக்கள்
இருக்கின்றன

Tuesday, September 8, 2009

தாமிரபரணி

தாமிரபரணி
இன்னும்
ஒடிக்
கொண்டுதானிருக்கிறது

தைப்பூச
மண்டபத்துப்
பெண்களைப்
போல்

வேண்டும் அம்மா

பெண்களுக்குச் சொல்லுகின்றேன் அன்பு செய்து
பெருமையுடன் மனித குலம் காத்து நிற்கும்
வண்மை கொண்ட நீங்கள் இங்கு அடிமையாக
வாழுவதில் நியாயம் இல்லை புரிந்து வாழ்வீர்
உண்மை இல்லாக் கணவனையும் உவந்து போற்றி
உயர் வாழ்க்கை வாழ்வது வாய்ப் போலி செய்து
கண்மணியாய் அவனையுமே காத்து நிற்கும்
காவியத்துப் பெண்கள் அல்ல உயிர்கள் நீங்கள்


உங்களுக்கும் உடல் உண்டு உணர்ச்சி உண்டு
உள்ளுக்குள் எத்தனையோ ஆசை உண்டு
தங்களையே புரியாத தடியரோடே
தான் வாழ்தல் நெறி என்ற மடமை தன்னை
புண்களைப் போல் கொண்டு நீரும் வாழ்ந்திருத்தல்
பொய் மடமை கோழைத்தனம் புரிவீர் நீரே
கண்கள் என்று உம்மை இங்கு புரிந்து கொள்ளா
கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா

Sunday, September 6, 2009

எங்கள் ஊர்

இன்னும்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
பத்திரமாகத்
தான்
இருக்கிறது

காலையில்
ஒரு
குயில்
எங்கிருந்தோ
கூவுகிறது

என்
வீட்டு
நந்தியாவட்டையிலும்
பவளமல்லி
மரத்திலும்
சிட்டுக் குருவிகள்
கொஞ்சிக்
கொண்டிருக்கின்றன

அதிகாலை
பால் மணிச்
சத்தம்
கேட்டுக்
கொண்டுதான்
இருக்கின்றது

புதிய
மனிதர்களையும்
போலீஸ்காரர்களையும்
பார்த்துத்
தெரு
நாய்கள்
குலைத்துக்
கொண்டுதான்
இருக்கின்றன

ஒற்றை
ஆட்டுக் கிடா
பத்துப்
பெண்
ஆடுகளைத்
துரத்திக்
கொண்டுதான்
இருக்கிறது

தெருப்
பெண்களுக்கு
அருள்
பாலிப்பதற்கென்றே
பசுக்கள்
காலையிலேயே
தெருவிற்கு
வந்து
விடுகின்றன

பாலாக்கீரை
அரைக்கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை
பாட்டிகளின்
குரல்
கேட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது

கரிசக்குளம்
கீரைத்தண்டு
கணபதி
விற்றுக்
கொண்டுதான்
இருக்கிறார்

ஆனையும்
திருமஞ்சனக்
குடமும்
அம்பாளுக்குப்
போய்க்
கொண்டு
தானிருக்கிறது

செண்பகப் பூ
விற்ற
தாத்தாவுக்கு
வாரிசுகள்
இல்லை
போல

நயினார்
குளத்திற்கு
வெளி
நாட்டுப்
பறவைகள்
வந்து
கொண்டு
தானிருக்கின்றன

அதிகச்
சிலைகள்
இல்லாததனால்
எங்கள்
ஊர்
கொஞ்சம்
அழகாகத்
தான்
இருக்கிறது

Friday, September 4, 2009

பெண்கள் காப்பீர்

மணம் கண்டு விட்டாலோ பெண்களெல்லாம்
மாப்பிள்ளை வீட்டார்க்குப் பெருமை சேர்க்க
குணம் கொண்டு வாழ வேண்டும் என்று சொல்லும்
கூட்டத்தார் வேறொன்றும் சொல்லுகின்றார்
தன் வீடு தாய் தந்தை அனைத்தும் இனி
தான் புகுந்த வீடு என்று வாழுவதை
பெண் வாழ்க்கை என்று இங்கு கூறுகின்றார்
பேதைமையின் உச்சமன்றோ மூட மாந்தர்


பெற்றவரை மறப்பதற்கா மணமாம் வாழ்க்கை
பெரியவரே அறிவு இன்றிப் பிதற்றுகின்றீர்
கற்றவராய் இருப்பாரில் சிலரும் கூட
கண்மூடிச் சொல்லுகின்றார் இந்தச் செய்தி
உற்றவனாய் ஒரு துணையைத் தேடித் தரல்
உரிமை என்று கண்டு கொண்ட பெற்றோர் தம்மை
மற்றவராய் ஆக்குதற்கு முயற்சி செய்யும்
மடமையினை விட்டொழிப்பீர் பெண்கள் காப்பீர்

Sunday, August 30, 2009

அவரையும் முடிக்கின்றாரே

ஆசைகள் மனிதருக்கு அதிகமாய் ஆக ஆக
மோசடிச் சாமியார்கள் முளைக்கின்றார் ஊர்கள் தோறும்
வேஷங்கள் போடுகின்றார் வித்தைகள் காட்டுகின்றார்
காசினை மூட மக்கள் கால்களில் கொட்டுகின்றார்
ஆசையில் அவரும் கெட்டு அதிரடிச் சாமியாரை
மோசடி செய்ய வைத்து அவரையும் முடிக்கின்றாரே

ஆடுது பொய்யில்

உழைப்பவர் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்தால்
உலகம் அவர்கள் கையில் - இதை
உண ராதாராய் இருப் பதனாலே
ஊழலும் ஆடுது பொய்யில்

Monday, August 24, 2009

துயரங்கள் தீர்க்க விழைவார்

கொடுமைகள் பல செய்து கொள்ளையர் ஆகியே
கோடிகள் சேர்த்து வாழ்வார்
கூட்டத்தைக் கண்டதும் கும்பிட்டு வணங்கியே
கோமகன் என்று நிற்பார்
அடிமைகள் போலவே நடித்தங்கு அவர் முன்னர்
அய்ய நீ வாழ்க என்பார்
அவர் அங்கு திரும்பிய மறுகணம் இறையிடம்
அழித்திட வேண்டி நிற்பார்


உயர் குணம் கொண்டவர் உண்மையாய் வாழ்பவர்
ஒரு போதும் தீங்கு நினையார்
உலகத்துப் பொறுமையை தனக்குள்ளே கொண்டவர்
ஊரங்கு வணங்க வாழ்வார்
துயர் கொண்ட வாழ்க்கையில் அவரைப் போல் நல்லவர்
துடித்திட மக்களெல்லாம்
தூயனாம் இறைவனை வேண்டியே அவர் தங்கள்
துயரங்கள் தீர்க்க விழைவார்

Sunday, August 9, 2009

இராமகிருஷ்ணர் நல்மொழிகள்

உருகுகின்ற வெண்ணெயதும் உருகும் வரை
ஒசை செய்யும் உஸ் என்று சத்தமிடும்
உருகி அது நெய்யானால் அமைதி கொள்ளும்
உயர் ஞானம் அடைந்தாரும் அவ்வாறேதான்
சிறு வண்டும் மலரினிலே அமரும் வரை
சீராக ரீங்காரம் செய்தே ஆடும்
மருவில்லாத் தேனருந்தும் நேரந்தன்னில்
மெளனம் தான் அதுவேதான் ஞானம் ஆகும்


அதிகமான தேனருந்தி விட்டதென்றால்
ஆகிவிடும் ரீங்காரம் அதிகமாக
அது போல நெய்யதனில் பூரி செய்தால்
அது சத்தமிடும் பூரி போடும் தோறும்
விதம் விதமாய் வாழுகின்ற மனிதருக்கு
விரி ஞானம் கொண்டார்கள் கீழிறங்கி
பதப் படுத்த இது போல வருவதுண்டு
பக்குவமே கொண்டவர் தம் பொறுமையாலே

Saturday, August 8, 2009

இராமகிருஷ்ணர் நல் மொழிகள்

ஞானத்தை அடைந்து விட்டார் மீண்டும் வந்து
நானிலத்தில் பிறப்பதில்லை எவ்வாறென்றால்
ஆன நெல்லை என்றைக்கு அவித்தீரோ நீர்
அதன் பின்னர் அது விதையாய் ஆவதில்லை
ஞானமதைப் பெற்றவரும் அவ்வாறேதான்
நானிலத்தில் எவ்வாறு வருவார்கள் தான்
ஊனமெல்லாம் விட்டொழியும் பிறப்பறுக்க
உண்மை ஞானம் இறையருளால் பெற்று விடும்

Monday, August 3, 2009

கொடுமை இது

எப்போதும் எல்லோர்க்கும் அன்பு செய்தல்
என்பதொன்றே தமிழ் எனக்குத் தந்த வழி
தப்பாக அதற்கென்று நாளைத் தேர்ந்து
தனியாக வைப்பதிலே பெருமை இல்லை
முப்போதும் எப்போதும் முறைகளிலே
முந்தி நிற்றல் தமிழர்கள் தம் பெருமை அய்யா
எப்போதும் நண்பர் என்பார் இதயத்துள்ளார்
இதற்கென்று தனி நாளா கொடுமை இது

Tuesday, July 28, 2009

வாழப்பாரும்

குழந்தைகளைக் கொல்லுகின்றார் பள்ளி என்னும்
கொலைக்கூடம் தன்னில் கொண்டு விடுகின்றாரே
நிரந்தரமாய் வாழ வைக்கும் கல்வியினை
நெஞ்சுணர்ந்து பண்புயரும் கல்வியினை
சிறந்தோங்கும் செந்தமிழை நந்தம் தாயைச்
செழிப்பாக்கச் செய்கின்ற கல்வி உண்டோ?
வரந் தந்து இறைவன் தந்த குழந்தைகளை
வதைக்காதீர் வதைக்காதீர் கொடுமை அது


எப்போதும் படிப்பு என்னும் கொடுமை அது
இதயமே இல்லாராய் அவரை மாற்றும்
தப்பாகிப் போட்டி என்று இருவர்க்குள்ளே
தரமில்லா உணர்வுகளைத் திணித் தொழித்தல்
இப்படியே செய்கின்ற கல்விக் கூட
இடும்புகளால் மனித உணர்வற்றே போகும்
கொப்பாகிக் கிளையாகி மலருமாகிக்
கொடுக்கின்ற காய் கனிகள் உதிருமோதான்


அப்பாவாய் அம்மாவாய் உம்மை ஆக்கி
அருள் செய்த ஆண்டவனும் அவரே யன்றோ
தப்பான கல்வி முறை தன்னில் கொண்டு
தண்டனைகள் தரலாமோ உணர்வீர் நீரே
எப்படியும் படிப்பார்கள் குழந்தைகளும்
இந்த நிலை உமக்கு உண்டோ அந்த நாளில்
அப்பாவே அம்மாவே உமக்குச் சொல்வேன்
அப்பாவாய் அம்மாவாய் வாழப் பாரும்

Thursday, July 23, 2009

நாலடியார் ஈகை

முரசு சத்தம் பத்து மைல் கேட்கும் நல்ல
முழங்கும் இடி நான்கு பத்து மைலில் கேட்கும்
தருவதொன்றே வாழ்க்கையெனக் கொண்ட சான்றோர்
தனக்கின்றிப் பிறர்க்குதவும் பெரியோர் வாழ்க்கை
சிறந்திருக்கும் மூன்றுலகும் சென்று சேரும்
செய்திடுவீர் உதவிகளை மாந்தர்களே
நிரந்தரமாய் அது ஒன்றே உங்களது
நிலைத்த புகழ் மூவுலகும் ஒங்கச் செய்யும்


நாலடியார்

ஈகை

கடிப்பிடும் கண்முரசு காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தாரெனப் படுஞ் சொல்

Wednesday, July 22, 2009

ஒன்று சேர்வோம்

செய்த நன்றி மறந்தாரைக் காணும் போது
சிறுமை செய்ய நாணாதார் காணும் போது
பொய்யொன்றே பேசி நிற்பார் காணும் போது
புரட்டாலே வாழ்ந்திடுவார் காணும் போது
கையூட்டால் வாழ்ந்திடுவார் காணும் போது
கரவான துறவியரைக் காணும் போது
மெய்யெல்லாம் துடிக்கிறதே என்ன செய்வோம்
மெய் காக்க அனைவருமே ஒன்று சேர்வோம்

Tuesday, July 21, 2009

வாழ்த்துகின்றோம்

பொச்சரிப்பில் வாழுகின்ற சில பேர் இங்கு
பொறுப்பின்றி அனைவரையும் தாக்கித் தாக்கிக்
கச்சை கட்டி ஆடுகின்றார் ஆடுகின்றார்
கணக்காகத் தனைப் பெரிய அறிஞனென்று
இச்சையினால் எழுதுகின்றார் என்ன செய்ய
இவரும் நம் தமிழினத்தார் அன்பு செய்வோம்
பச்சையாக எழுதுகின்றார் என்றால் கூடப்
பசுந்தமிழால் எழுதுகின்றார் வாழ்த்துகின்றோம்

Thursday, July 16, 2009

கல்வித் தந்தை ரோச்

நல்லதொரு தந்தையினை ரோச் என்னும்
நாயகரை தொலைக் காட்சி ஒன்றில் கண்டேன்
வல்லவராம் அவர் வாழும் திருச்சி நோக்கி
வாழ்த்தி நின்றேன் போற்றி நின்றேன் ஆடி நின்றேன்
சொல்லுகின்றேன் அவர் பெருமை ஆகா ஆகா
சுகம் சுகமே குழந்தைகட்கு உணர வேண்டும்
கொல்லாதீர் குழந்தைகளை பள்ளி என்னும்
கொலைக் கூடம் தனில் அளித்தல் நிறுத்துவீரே


பெண் குழந்தை இருவரையும் பள்ளியிலே
பெற்றோர்கள் இருவருமே பார்க்கப் போக
கண் திறந்த மனிதராய் ரோச்சும் ஆன
கதை கேட்டேன் மெய் சிலிர்த்தேன் வாழ்க வாழ்க
உண்மை இது உணர்ந்து உங்கள் குழந்தைகளை
உடன் காக்க உரிய வகை செய்வீர் நீரே
பண் பாடி குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க
படிப்பாரே உயர்வாரே மனிதராக


காலை முதல் இரவு வரை படித்தல் என்ற
கட்டாயத் திட்டம் ஒன்றை அவர்கள் பள்ளி
வேலையென அறிவிக்க ரோச் அவர்கள்
விரைவாக ஒரு முடிவை எடுத்தார் அன்றே
நாளை முதல் பிள்ளைகளே பள்ளி வேண்டாம்
நலமான கல்வியினை மனம் மகிழ
வேளை தேர்ந்து வீட்டிலேயே கற்றிடுவீர்
விரும்புகின்ற நேரங்கள் தன்னில் எல்லாம்


கோழையென ஆக்குகின்ற இந்தக் கல்வி
கொடுமையிலே நீர் வாட வேண்டாம் என்றே
பேழை மன ரோச் எடுத்த முடிவில் இன்று
பெரு வெற்றி இருவருமே மிகச் சிறப்பாய்
வாழையடி வாழையென வளரும் கல்வி
வடிவத்தில் வெற்றி கண்டு உயர்ந்துள்ளார்
தோழரென அனைவருக்கும் உதவுகின்ற
தொண்டு மனப் பான்மையுடன் வென்று உள்ளார்


முதற் பெண்ணோ ஐஏஎஸ் எழுதுகின்றார் தங்கை
முதுகலையில் வெல்கின்றார் மேலும் கற்க
கதையில்லை கண் முன்னர் திருச்சியிலே
காட்டியுள்ளார் ரோச் என்னும் நல்ல தந்தை
இதை உணர்வீர் மனித உணர்வற்றவராய்
இதயமின்றிக் குழந்தைகளைக் கொல்லுகின்ற
வதைக் கூடப் பள்ளிகளை விட்டொழிப்பீர்
வாழ வையும் குழந்தைகளை மனிதராக

Wednesday, July 15, 2009

நசுக்கலாமோ? குழந்தைகளும் கல்வியும்

விற்கின்ற கல்வியிலே மாட்டிக் கொண்டு
வீணாகப் போகின்றார் குழந்தைகளும்
கற்கின்ற கல்வியில்லை விளையாட்டில்லை
கனம் கனமாய் மண்டையிலே ஏற்றும் வேலை
பிற்காலம் உடல் நோயும் மனத்தில் நோயும்
பெற்றழியும் கல்வியினை திணிக்கின்றார் காண்
பெற்றோரும் சேர்ந்திந்தப் பெரும் பிழையைப்
பீடையினைச் சேர்க்கின்றார் என்ன செய்ய?


மதிப்பெண்கள் மதிப்பெண்கள் பெற்றால் போதும்
மனித மனம் உயர்ந்த குணம் எல்லாம் வேண்டாம்
விதிக்கின்ற விதிகளிலே பண்பு இல்லை
வெல்லுகின்ற நல்ல குணம் சொல்வதில்லை
கதியிதிலே மாட்டி நாட்டின் கண்மணிகள்
கலங்குகின்றார் புலம்புகின்றார் துன்பம் துன்பம்
எது எதிலே போய் முடியும் இந்த நாட்டின்
எதிர்காலம் அவர்களன்றோ நசுக்கலாமோ?

Sunday, July 12, 2009

விலகி வாரும் இந்து முன்னணி

இந்து முன்னணி என்ற பெயரில் சாதி
எச்சத்தைக் காட்டுகின்றார் சில பேரிங்கு
முந்தி ஒரு இராமன் வைத்த சிவனை அங்கு
முறையாகக் கருவறைகள் கட்டிக் காத்தான்
அந்த ஒரு கண்டி வேந்தன் அதற்கு பின்னர்
அடுக்கான பிரகாரம் கோபுரங்கள்
செந்தமிழாய் வாழ்ந்துயர்ந்த சேதுபதி
செம்மறவர் பெருங் கூட்டம் செய்ததங்கு


முந்தி உள்ளே பிரகாரம் சேவைகளை
முத்தமிழின் நகரத்தார் தேவகோட்டை
சொந்த ஜமீன் செய்து வைத்தார் பின்னர் அங்கே
ஜோதி மய லிங்கத்தை வந்து சென்ற
அந்தணராம் ஆதி சங்கராச்சாரியார்
அவர் கொண்டு வழி படவே வைத்துச் சென்றார்
சந்ததமும் மராட்டியர்கள் பூஜை செய்யும்
சரித்திரமும் அன்று தான் உருவாயிற்று


இந்த விதம் உருவான கோயில் ஒன்றே
இராமேஸ்வரத்துக் கோயில் அதிலே இன்று
பந்தம் உள்ளோர் குட முழுக்குச் செய்த அன்று
பைந்தமிழின் துறவியர்கள் இருவர் அங்கு
சென்று வழி பட்டதிலே இருவர் அங்கே
சீறுகின்றார் அவர் இருவர் உள்ளே உள்ளே
சென்றனராம் அது தவறாம் கூறுகின்றார்
சீர் கெட்ட தமிழர்களால் வந்த கேடு


குன்றக்குடி மடமும் மதுரையுமே
குற்றத்திற்கு ஆளாகியுள்ளார் அந்தோ
நின்றருளும் எம் சிவனுக்கு உரிமையானோர்
நிந்திக்கப் படுகின்றார் சாதியாலே
இன்றுணர்வீர் தமிழினத்தீர் மதத்தைச் சொல்லி
ஏய்ப்பவர்கள் ஒரு சாதிக்காரர் என்று
கன்றினைப் போல் அவர் பின்னால் ஒடுகின்ற
கண் மூடித் தனம் விட்டு விலகி வாரும்

Saturday, July 11, 2009

உலகம் தன்னை

அன்பு செய்யப் பயிற்சி இன்றிப் போனதாலே
அவதியுற்று உறவு எல்லாம் விலகு தின்று
வம்பு செய்து துன்பமுறும் வழக்கமெல்லாம்
வாடிக்கையாகுதிங்கு அய்யோ அய்யோ
கண்ணிருந்தும் குருடரைப் போல் வாழுகின்ற
கவலை சேர்த்து அழிகின்ற தன்மை நீக்கி
அன்பு செய்வீர் நண்பர்களே தந்தை தாயை
அண்டி நிற்கும் உறவுகளை உலகம் தன்னை

Thursday, July 9, 2009

மனிதனாக்கி வைத்தார்

குறள் கற்ற காரணத்தால் மனத்துக்குள்ளே
குறு குறுப்பு தவி தவிப்பு தெளி நினைப்பு
பிறழ்கின்ற மனம் தன்னை நெறியதாக்கி
பிறர் போற்ற வாழ வைத்த பெரு உயர்வு
இறந்தாலும் பெருங் காலம் வாழ்வதற்கு
இயல்பாகி வந்தமைந்த நல்ல குணம்
சிறந்தோங்கச் செய்தார் எம் வள்ளுவரும்
சீராக்கி எமை மனிதனாக்கி வைத்தார்

Saturday, July 4, 2009

வா மீத முலை நூலில் இருந்து காதல்

உன்னைத்
தென்றல் என்றது
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தழுவினாய்


உன்னை
மலர்கள்
என்றதும் கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
மலர்ந்தாய்


உன்னைக்
கவிதை
என்றது கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தோன்றினாய்


உன்னைத் தேடவிட்ட
காரணத்தால்
தேன்
என்கின்றேன்


உன்னைத்
தீண்ட
முடியாக்
காரணத்தால்

தீ
என்கின்றேன்

வா மீத முலை நூலில் இருந்து நடிகை

கவர்ச்சி வேண்டும்
காதல் வேண்டும்

கட்டிப் பிடித்து
ஆடவும் வேண்டும்

மைதுன உணர்வில்
மகிழ்ந்து விட்டு

நடிகையின்
கற்பில்

விமர்சனம்
வேறு

Friday, July 3, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து அவ்வையார்

கல்யாணம்
வேண்டாம்

என்றால்

பேரிளம்
பெண்ணாக்கிய
பிள்ளையார்

ஆகவே
வழியில்லை

என்றால்
ஆக்க மாட்டாரோ?

அகவல்
வெண்பா

பாடத்
தெரியுமா?

வா மீத முலை எறி நூலில் இருந்து

தங்கு தடையின்றி
தமிழே வாழ்க

தமிழினம்
எதிலும்

தலைமை
தாங்குக

தலைவலி
என்றால்

அனாஸின்
போடுக

வா மீத முலை எறி நூலில் இருந்து

தமிழைக்
காக்கும்

அறிஞர்
விருந்தில்

சென்னா
பட்டூரா

பாலக்
பன்னீர்

வா மீத முலை எறி நூலில் இருந்து ஆங்கிலம்

ஆங்கிலம்
ஒர்

அற்புதம்
செய்யும்

குடிக்கும்
இடமும்
பார் தான்

நீதித்
துறையும்
பார்தான்

வா மீத முலை எறி நூலில் இருந்து

அழுகையிலும்
அவ
அழகு
யம்மாடி

ராமசாமி
பொணத்த

இன்னும்
தூக்கல

கூடு
விட்டுக்
கூடு
பாய

நாம
என்ன
சாமியாராவேய்

வா மீத முலை எறி நூலில் இருந்து இராமன்

வேள்விப்
பொருளில்
பிறந்த
இராமன்

தேர்தல்
தோறும்

பிறப்பது
எப்படி?

வா மீத முலை எறி நூலில் இருந்து விநாயகர்

விநாயகர்
ஊர்வலம்

முடிந்த
ஜோரில்

விநாயகர்
ஒயின்ஸில்

வியாபாரம்
கன ஜோர்

வா மீத முலை எறி நூலில் இருந்து பிள்ளையார்

பிள்ளையாரிடம்
ஒடிப்போனேன்

அவசரமாய்
அபயம் கேட்க

சொனா
பானா

உபயத்திலேதான்

பிள்ளையார்
இருந்தார்

வெளிச்சத்தில்

Thursday, July 2, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து இரண்டும் ஒன்று

இரண்டும் ஒன்று


முன் அட்டை

பின் அட்டை

அழகும்

முகவுரைத் தெளிவும்

தீர்க்கமான பார்வையும்

கனமான

உள்ளடக்கமும்

ஆழமான பொருளும்

விரிய விரிய

விளங்கும்

விளக்கவுரையாக


நீ

ஒரு

புத்தகம்

கண்ணே

வா மீத முலை எறி நூலில் இருந்து வீரப்பன்

திரைப்பட

நடிகர்கள்

வீரம்

தெரிந்தது


வீரப்பன்

கடத்தல்

விளையாட்டின்

பின்னால்

வா மீத முலை எறி நூலில் இருந்து

எரிப்பது என் மதம்

புதைப்பது என் மதம்



பூகம்ப

முடிவில்

புதைந்தது

போக


எரிந்தது

எல்லாம்

Wednesday, July 1, 2009

துறந்து நின்றார்

கற்பெனவே ஒரு சொல்லை வைத்துக் கொண்டு
கதைக்கின்றார் கதைக்கின்றார் ஆடவர்கள்
சொற்பெருக்கு ஆற்றுகின்றார் ஆடுகின்றார்
சுத்தம் என்றும் ஒழுக்கம் என்றும் பிதற்றுகின்றார்
கற்பு எனும் ஒழுக்கத்தை தாங்களும் தான்
கடைப் பிடிக்க வேண்டும் என்றல் மறந்து நின்றார்
அற்புதத்தான் பாரதியாம் மகாகவியும்
அன்று சொன்ன வார்த்தையினை துறந்து நின்றார்

Sunday, June 28, 2009

ஆண்டவனும் அதில் ஒருவர்

வெள்ளை நிறத்தோலுக்காய் வினை தேடிக் கொண்டானோ
வெற்றிகளும் பணமதுவும் வீழ்த்துதற்கு முனைந்தனவோ
கள்ளமில்லா துள்ளிசையில் ககனத்தை வென்றவனை
கால மகன் வென்றிடவே கணக்கெழுதி முடித்தானோ
வெள்ளையில்லை கறுப்புமில்லை அனைவரையும் வென்றவனை
விரி இசையும் நடனமதும் ஒருங்கிணைத்துக் கொண்டவனை
உள்ளமெல்லாம் கொண்டழுவார் உலகத்தில் பல கோடி
உணராமல் இருப்பாரா ஆண்டவனும் அதில் ஒருவர்

Friday, June 26, 2009

கரிய செல்வம் மைக்கேல் ஜாக்சன்

இறந்து விட்டான் என்கின்றார் அவனை நாம்தான்
இழந்து விட்டோம் என்பதனை மறந்தவராய்
பரந்து பட்ட உலகமெங்கும் பாப் இசையால்
பட படக்க வைத்தவனை ஜாக்சன் தன்னை
மறைந்து விட்டான் என்கின்றார் அய்யோ அய்யோ
மனங்களுக்குள் நிறைந்தவனா மறைவான் இல்லை
நிறைந்திருப்பான் உலகமெங்கும் கோடி கோடி
நெஞ்சத்தில் மைக்கேலாம் கரிய செல்வம்

Tuesday, June 23, 2009

இளைஞர் இனம்

பணம் மட்டும் வாழ்க்கையென்று பகட்டுக் காட்டும்
பண்பற்ற மனிதர்கள் தம் வாழ்க்கை கண்டு
குணம் விட்டுப் பணம் தேட முயலுகின்றார்
குறை மனிதர் கைதாகி அலறுகின்றார்
பிணம் போலப் பெரும் பணத்தைச் சேர்த்து நின்றார்
பெரும் பதவி தனில் அமர்ந்து புளுகுகின்றார்
இனம் காக்க நாடு காக்க வாழ்ந்த காந்தி
ஏழை காமராஜர் கக்கன் காணவில்லை


இரு வேட்டி மட்டும் உடையென்று வாழ்ந்த
இந்தியத்துப் பேரருளாம் காந்தி மகான்
மறு வேட்டி இல்லாமல் வாழ்ந்திருந்த
மாபெரிய தோழர் எங்கள் ஜீவானந்தம்
கருவுற்றுப் பெற்றெடுத்த தாய்க்காய்க் கூட
கண்ணியத்தை இழக்காத காமராஜர்
திருவுற்ற இந்த நாட்டில் வாழ்ந்தார் என்றே
தெரியாமல் இருக்கிறதே இளைஞர் இனம்

Monday, June 22, 2009

பெண்ணுரிமைப் பொய்

பெண்களுக்கு எப்பொழுதும் எங்கும் துன்பம்
பேசுவதோ மேடை தோறும் பெண்ணுரிமை
கண்கள் எங்கள் பெண்கள் என்று கதைத்து நிற்றல்
கவிதைகளில் காவியத்தில் பெண் பெருமை
புண்கள் இந்தப் புண்கள் புரையோடிப் போக
பொய்யெல்லாம் மெய் போல ஆடி நிற்க
தங்கள் தாயவளோ முதியோர் இல்லத்தில்
தாரமதோ நீதி மன்றில் மண முறிவிற்கு

Sunday, June 21, 2009

உயர்வீர் நீரே

வென்று விட்டார் என்றாலே வாழ்த்துவது
வீழ்ந்து விட்டார் என்றாலே தூற்றுவது
தொன்று தொட்டு நம் நாட்டார் தோல்வியிது
தொட்டில் பழக்கம் அது தொடருதிங்கு
நின்றெதையும் சிந்தித்து உணர்ந்து பின்னர்
நிலை தெளிந்து பேசுதலே உண்மையாகும்
என்றுணர்வீர் அன்றேதான் இந்த நாட்டின்
நிலையுயரும் உணர்ந்திங்கு உயர்வீர் நீரே

குமுறுகின்றார்

வென்று விட்டார் என்றவுடன் ஊர்வலங்கள்
வீதியெங்கும் தோரணங்கள் மக்கள் வெள்ளம்
கொன்று விட்டார் என்றெல்லாம் கூப்பாடுகள்
கோடிகளை அவர்க்களித்துக் கொண்டாட்டங்கள்
நின்றபடி வந்தவரை வாழ்த்தி வாழ்த்தி
நிலை குலைந்து நின்றன்று ஆடியவர்தான்
கொன்றிடுவோம் கேவலம் இத் தோனிதன்னின்
கூட்டத்தை என்றெல்லாம் குமுறுகின்றார்

Saturday, June 20, 2009

ஆடு ஆடு

ஒம் பலிக்காய்ப் பல பேரு இங்கே இன்னும்
உயிரோட பிணமாத்தான் வாழ்ந்திருக்கார்
தன் பெண்டு தன் பிள்ளை என்றே வாழ்ந்து
தவித்திருக்கும் ஏழையரை ஏச்சே வாழ்ந்தார்
கண் பார்க்க வேண்டாம் சுடுகாடு விட்டு
காடான நாட்டுக்குள் வந்து ஆடு
புண்ணான மனிதரையே பொசுக்கி ஆடு
பொங்க வைக்கோம் சொடலமாடா ஆடு ஆடு

வர மாட்டியா?

கோடிக்கு மேல் சொத்து உள்ளோரெல்லாம்
கூட்டாக நாடாளுமன்றம் சேர்ந்தார்
ஆடிக்குக் கழிவினிலே துணி எடுக்கும்
அப்பாவி மக்கள் எல்லாம் வாக்குத் தந்தார்
வாடிக்கையாக தந்த வாய்ச் சொல்லெல்லாம்
வறுமையிலே ஏழைக்கு மறந்தே போகும்
ஆடி ஆடி இவங்களையே கேள்வி கேக்க
அய்யா ஏஞ் சொடல மாடா வர மாட்டியா?

கேக்கப் போற

கையூட்டுப் பெற்றதற்காய் சின்னச் சின்னக்
காவலர்கள் பணியாட்கள் பலரை இங்கு
மெய்யாகக் கைது செய்து மிக விரைவாய்
மேலான நடவடிக்கை எல்லாம் கொள்வார்
அய்யாயிரம் கோடி கோடி கோடி
அடித்தவர்கள் வீட்டிற்கோ காவல் செய்வார்
எய்யா ஏஞ் சொடலமாடா வர மாட்டியா?
எப்ப வந்து இவங்களைத்தான் கேக்கப் போற?

Thursday, June 18, 2009

கம்பனின் வாலி பதில் இன்றும் இல்லை

மறைந்திருந்து அம்பு விட்ட மன்னவனை
மனத்திற்குள் தெய்வமெனப் போற்றி வாழும்
நிறைந்திருக்கும் நல் மனத்தான் வாலி தானும்
நேர் படவே கேட்கின்றான் கேள்வி ஒன்றை
மறைவாக உன் மனையாள் தன்னை தூக்கி
மனத்துள்ளே சிறை வைத்த அரக்கன் விட்டு
குறையில்லா ஆட்சி கொண்ட குரங்கு என்னை
கொல்வதற்கு முயன்றுள்ளாய் என்ன நியாயம்


இரக்கமே உனை நம்பி வாழ நீ அந்த
இரக்கத்தைக் கை விட்டாய் மிகச் சிறந்த
தரமான புகழையும் நீ விட்டு விட்டாய்
தனியாகிப் போனாயே என்தலைவா
உறக்கத்தில் கூட ஒரு தவறு செய்ய என்றும்
உன்னாதாய் மனு நெறியில் இவ்வாறெல்லாம்
கிறுக்காகத் தீர்ப்பளிக்க வழியுளதோ?
கேட்கின்றான் வாலி பதில் இன்றும் இல்லை

Wednesday, June 17, 2009

வணங்கி நிற்போம்

ஊடலிலே தோற்றவர்கள் வென்றார் என்று
உலக மறை வள்ளுவனார் சொல்லி நின்றார்
தேர்தலிலே தோற்றவரும் வென்றார் எங்கள்
தேசத்தில் பெரும் பொறுப்பில் இருக்கின்றாரே
பாட நூலில் வள்ளுவரைப் படித்தவர்தான்
பல முறையும் அவையினிலே சொன்னவர்தான்
நாடவில்லை நாணத்தை அதனால் தானே
நாணமின்றிப் பெரும் பதவி தன்னை ஏற்றார்


ஊடகங்கள் அவர் குறித்துப் பேசவில்லை
உயர்மனிதர் யாரும் வாய் திறக்கவில்லை
நாடகங்கள் நடத்துகின்றார் நாடு முற்றும்
நாணயத்தால்(பணத்தால்) வெல்லுகின்றுகின்றார் நாணமின்றி
கேடு கெட்ட மனிதர் இவர் வழிகள் சொல்வார்
கேட்டு நன்கு மகிழ்ந்திடுக இந்தியத்தார்
சூடு என்றால் சொரணை என்றால் ஏழை மக்கள்
சொத்தாக்கி வாழுகின்றார் வணங்கி நிற்போம்

Tuesday, June 16, 2009

பழம் பாடல் புதுக் கவிதை கம்பன் வாலியின் வினாக்கள்

வாலியின் முன் நிற்கின்ற இராமனிடம்
வகை தொகையாய்க் கேள்விகளை வைத்தான் வாலி
மாலவனா இச் செயல்கள் செய்தான் என்று
மனத்துக்குள் மறுகி நொந்து கேட்டான் வாலி
தூயவனே அஞ்சு வகைக் கொடுமைகளில்
துடிக்கின்ற முதற் கொடுமை கொலைதான் அதை
மாயவனே நீ செய்து முன்னே வந்தாய்
மயக்கமது துணைவியினை இழந்ததாலோ

காய்கின்றாய் இராவணனை அவனோ அந்தக்
கடைக்கோடிக் கொடுமையதாம் காமம் கொண்டான்
ஆய்வு செய்தால் உன் குற்றம் முதற் குற்றமாம்
அறிந்தாயா மன்னவனே மானை விட்டு
சேயிழையை கவர்ந்து சென்றான் சிறை எடுத்தான்
சிறப்பாக தம்பியினை முன்னே விட்டு
நீ யெந்தன் உயிரினையே கவருகின்றாய்
நினைத்தாயா? இரண்டுமிங்கு ஒன்றுதானே


நாளை இந்த உலகத்தில் வீரரென்போர்
நடத்துவது நியாயம் என்று உலகோர் சொல்ல
வாளழகா நீ இந்த வழியைத் தந்தாய்
வழியின்றி நிற்குது இங்கே நேர்மை எல்லாம்
ஆழமாக வைக்கின்றான் வினாக்களையே
அதையேதான் இன்று இந்த உலகமெங்கும்
வாழையடி வாழையென பெரியார் செய்தால்
வான் பெருமாள் செய்தது போல் என்றார் கண்டோம்

கம்பன்

அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவதாண்மைத்
துறையெனல் ஆயிற்றன்றே தொன்மையில் நன்னூற்கெல்லாம்
இறைவ நீ என்னைச் செய்தது ஈதெனில் இலங்கை வேந்தன்
முறையல செய்தான் என்று முனிதியோ முனிவிலாதாய்


கொலை,களவு,பொய்.சூது.காமம் 5 குற்றங்கள் இராவணன் செய்தது
இறுதிக் குற்றம்.இராமன் செய்ததோ முதற் குற்றம்

Monday, June 15, 2009

மேலே இருந்தார்

போதி மரப் புத்தரினை ஆங்காங் நாட்டார்
பொருப்பினிலே மிகச் சிறப்பாய் அமர்த்தி உள்ளார்
நீதி அவன் சொன்னதெதும் நெஞ்சில் இல்லை
நிலையாமை குறித்த எண்ணம் எதுவும் இல்லை
வாய் திறந்து அண்ணாந்து பார்ப்பதற்காய்
வடிவமைத்து வைத்து உள்ளார் பெருமையாக
போய்ப் பார்த்தேன் நானுந்தான் என்ன செய்ய
பொறுமையுடன் புத்தருமே வீற்றிருந்தார்

ஆங்காங் புத்தர்

கடவுள் வழி

பல்வேறு வழிகளிலே தெய்வம் தன்னைப்
பணிகின்றார் அவரையெல்லாம் வேண்டுகின்றேன்
நல் வழியை உணர்ந்துள்ள உங்களுக்குள்
நடக்கின்ற அர்த்தமற்ற சர்ச்சைகளால்
பல் விதமாய் உமைக் கேலி செய்வதற்கு
பலர் இங்கே அலைகின்றார் அவர்க்கு எல்லாம்
சொல்லெடுத்துத் தருகின்ற வேலை விட்டுச்
சோதரராய் இணைந்திருத்தல் கடவுள் வழி

Sunday, June 14, 2009

உணர்வீர் நீரே

வாழுவதை மகிழ்ச்சியாக வாழ்ந்திருத்தல்
வகையாக அன்பு செய்து வாழ்ந்திருத்தல்
சூழுகின்ற நல்லதெல்லாம் கொண்டிருத்தல்
சொல்லெல்லாம் உண்மையெனக் கொண்டிருத்தல்
பேணுகின்ற நன்மையெல்லாம் பெரிதாய்க் கொள்ளல்
பெரியவரைப் போற்றுதலை உயிராய்க் கொள்ளல்
காணுகின்ற நல்லதெல்லாம் போற்றி நிற்றல்
கடவுள் சொல்லும் வழி நன்கு உணர்வீர் நீரே

யோகா சிலம்பம் களரி இறகுப் பந்து என பல் துறை வீரர் தம்பி யுவராஜ் தனது முதன்மை மாணவியரோடு

Saturday, June 13, 2009

ஆங்காங்கில் விருந்தோம்பிய என் குடும்பம்

என்றும் வாழ்க

விருந்தோம்பல் தமிழர்களின் வெற்றி என்று
விரித்துரைப்பார் என் தாயும் என்னிடத்தில்
கரும்பாக விருந்தோம்பல் தன்னைக் கண்டேன்
கனிவான மணி ராமின் அன்பு வீட்டில்
அரும்பான முல்லை மலர்ச் சிரிப்பினோடு
அன்பு ராதா பானு தந்த உணவு எல்லாம்
சிறந்தோங்கி நின்றதெந்தன் தமிழைப் போல
சீர் கொண்டு அன்பரவர் என்றும் வாழ்க

நான் பாடுவேன்

அன்பு செய்ய யார் இவர்க்குச் சொல்லித் தந்தார்
அடடா நான் வியந்து நின்றேன் மகிழ்ந்தும் நின்றேன்
பண்பு நிறை ஜானகித் தாய் இருவரையும்
பைந்தமிழாய் வளர்த்துள்ளார் துணையாய் வந்த
செண்பகங்கள் பானுவோடு ராதா என்னும்
சிறப்பான மருமகள்கள் துள்ளித் துள்ளி
என் மனத்தைக் கொள்ளை கொண்ட ஆயுஷ் பேரன்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

Friday, June 12, 2009

வாழ்த்துகின்றேன்

பிறந்ததுவோ வேற்று நாட்டில் மனது முற்றும்
பெருந்தமிழாய் வாழுகின்றார் யூனூஸ் அய்யா
சிறந்திலங்கும் தமிழினத்தின் காப்பியங்கள்
செய்யுள்கள் கட்டுரைகள் என்று பல
நிறைந்திருக்கும் இவர் மனத்தில் தமிழர்க்காக
நெஞ்சார உதவிகளைச் செய்து வாழும்
சிறந்திருக்கும் பெரியவரை யூனூஸ் தம்மைச்
செந்தமிழாய் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்

ஆங்காங்கில் தமிழ் காக்கும் பெரியவர் யூனூஸ் அய்யா அவர்களும் மகன் வெங்கட்ரமணாவும் தம்பி ரவிச்சந்திரனும்

Saturday, June 6, 2009

என்ன செய்ய ஹாங்காங் புத்தருடன்

மலை மேலே புத்தரினை பார்த்து நின்றேன் மனிதர்களின் கூட்டமதும் கண்டு நின்றேன்
அலை பாயும் மனம் கொண்டார் அனைவருமே அங்கிருந்தார் புத்தரினை உணர்ந்திடாமல்
நிலையாமை உணராதார் கேளிக்கைக்காய் நெஞ்சினுள்ளே பல உணர்வு கொண்டு நின்றார்
விலையாகிப் போய் விட்டார் மனிதரெல்லாம் வேதனையில் நான் வந்தேன் என்ன செய்ய

Wednesday, June 3, 2009

பெருமை உண்டோ?

குணம் சேரு குணத்தின் வழி பணத்தைச் சேரு
கூறி நின்றார் நம் மூத்தோர் பல வழியில்
பணம் சேரு சேர்ப்பதற்குப் பல வழிகள்
பகருகின்றோம் அது வழியில் பணத்தைச் சேரு
எனச் சொல்லி நிற்கின்றார் இந்தச் வேளை
இது சொல்லித் தர பணமும் வாங்குகின்றார்
மனம் சேராப் பொருள் சேர்த்தல் மயக்கம்தானே
மணமான குணம் இன்றேல் பெருமை உண்டோ?

Tuesday, June 2, 2009

வாழ்வதற்கு

மதங்களின் பேரால் கொல்லுகின்றார்
இனங்களின் பேரால் கொல்லுகின்றார்
மனிதர்கள் என்ற உணர்வே இன்றி
மறுபடி மறுபடி கொல்லுகின்றார்
விதம் விதமாகக் கொலைகளைப் புரிந்து
வீணே மனிதர் மாளுகின்றார்
விரிந்த நல் இதயம் பரந்த நல்லுணர்வு
வேண்டும் மனிதம் வாழ்வதற்கு

கொடுவழியினிலே

வன்முறையற்ற வழிமுறை ஒன்றை
வகுத்தே தந்தார் காந்தி மகான்
நன்முறை ஏற்றார் மண்டேலாவும்
நல்லவர் மார்ட்டின் லூதருமே
தன் முறை யென்று சொன்னாரா? எம்
தாயக முறையே இதுவென்றார்
வன்முறையாளர் அவரைக் கொன்றார்
வன்முறையாம் கொடு வழியினிலே

Sunday, May 31, 2009

ராகுல் காந்தி 4

அமைச்சராகப் பொறுப்பேற்றால் கட்சி நாடு
ஆக்கம் பெறும் வேலைகளைச் செய்யொணாது
தமக்கு வேலை மக்களோடு இருத்தல் அவர்
தாழ்ந்திருக்கும் நிலை தன்னை மாற்றல் என்று
பொறுப்போடு சொல்லி நிற்கும் இளையவனை
பொறுமையெனும் பெருமை கொண்ட இனியவனை
விருப்போடு வாழ்த்தி நிற்போம் ராகுல் வாழ்க
வெற்றியெல்லாம் ஏழையரை வந்துசேர்க

Friday, May 29, 2009

ராகுல் காந்தி 3

தந்தையவர் பண்போடும் பதவி வேண்டாத்
தாயவரின் தெளிவோடும் பாட்டியவர்
முந்தி யிந்த நாடாண்ட முறைகள் கண்டும்
மூத்த நேரு தாத்தாவின் நேர்மையோடும்
வந்து நிற்கும் இவ்விளைஞன் தன்னைக் கண்டு
வாயார வாழ்த்துகின்றேன் ராகுல் வாழ்க
சொந்தங்கள் ஏழைகளே என்று அவர்
சுகம் காணப் போராட வந்தாய் வாழ்க

Thursday, May 28, 2009

ராகுல் காந்தி 2

முன் வரிசை தனில் அமரக் கூசுகின்றார்
முறுவலுடன் பின்னாலே அமருகின்றார்
தன் தகுதி பெருமையெல்லாம் உணர்ந்ததனால்
தடுமாற்றம் இல்லாமல் உயருகின்றார்
என் நாடு இந்தியா என்றுணர்ந்து
இளைஞர்களை நாட்டுணர்வால் ஒன்று சேர்த்தார்
கண்ணான கண்மணியாம் ராகுல் காந்தி
கவலைகளைத் தீர்த்திடுவார் நம்பி நிற்போம்

ராகுல் காந்தி

வெள்ளுடை வெள்ளுள்ளம் வெண் சிரிப்பு
விரிவான நற்குணங்கள் பட்டறிவு
கொள்ளை கொள்ளும் அழகு முகம் வஞ்சகத்தின்
கூட்டில்லை என்று எங்கும் காட்டி நிற்கும்
நல்லவனாய் வல்லவனாய் இளைய மகன்
நாடு காக்க வந்துள்ளான் ராகுல் ராகுல்
சொல்கையிலே நாவினிக்க உளம் களிக்க
சொல்லுகின்றோம் இளைய மகன் வாழ்க வாழ்க



பதவிகளைப் பெறுவதற்காய்ப் பல்லிளித்து
பரிதவித்துச் சொல்லிழந்து துடி துடித்துக்
கரவு மனம் தனை மறைத்து நல்லோர் போல
கவிதை சொல்லி ஏமாற்றும் தீயோர் முன்னே
உதவி செய்ய வந்தேன் நான் ஏழைக்காக
உயர் இயக்கம் நாடு காக்க என்றே வந்தேன்
பதவி யெதும் வேண்டாப் பணி செய்ய வந்தேன்
பண்பு நிறை ராகுல் சொன்னார் வாழ்க என்றும்

Monday, May 25, 2009

குரான் கருத்து

வாழ்நாளை நீ வாழ்ந்த வழியைச் சொல்லு
வளம் சேர்த்த வழிகளினைச் சொல்லி நில்லு
சூழ்ந்த செல்வம் செலவான வழியைச் சொல்லு
சுக இளமைக் காலத்தின் வாழ்வைச் சொல்லு
தேர்வான உன் அறிவால் மனித வாழ்வில்
தேர்ந்தெடுத்து நீ செய்த செயல்கள் சொல்லு
ஒர்ந்து இதனைச் சொல்லாமல் இறைவன் அவன்
உயர் நீதி மன்றம் விட்டு விலகொணாது

வடிக்கின்றார் காண்

நடிக்கின்றார் நடிக்கின்றார் நாணமின்றி
நாள்தோறும் நாள்தோறும் நடிக்கின்றார் காண்
துடிக்கின்றார் துடிக்கின்றார் துடிக்கின்றார் காண்
தொகை வகையாய்த் தன் குடும்பம் வாழ்வதற்கு
பிடிக்கின்றார் பிடிக்கின்றார் பிடிக்கின்றார் காண்
பெற அரிய பதவிகளைப் பிடிக்கின்றார் காண்
வடிக்கின்றார் வடிக்கின்றார் வடிக்கின்றார் காண்
வறியவர்கள் கண்ணீரை வடிக்கின்றார் காண்

Sunday, May 24, 2009

தந்தை தாயோடும் அவர்கள் உடன் பிறந்தவர்களோடும்

கவியாக்கிய தாயோடு

Saturday, May 23, 2009

தமிழாக்கிய தந்தையும் கவியாக்கிய தாயும்

Friday, May 22, 2009

வேடம் என்று

தமிழுக்காய் உயிர் கொடுப்பேன் என்று சிலர்
தம்பட்டம் அடிக்கின்றார் பல நாட்களாய்
உமிழ் நீரைக் கூட இவர் பிறருக் கென்று
உதவிடவே மாட்டார்கள் பேச்சு பேச்சு
கமழ் தமிழைக் காப்பாற்ற இவரையன்றி
கனித் தமிழர் யாரும் இல்லை என்றும் சொல்வார்
தமிழுக்கு இவர் தம்மைத் தெரியும் இவர்
தமைக் காக்கப் போடுகின்ற வேடம் என்று

Thursday, May 21, 2009

யார் வீரர் நபி பெருமானார்

யார் வீரன் என்பதற்கு நபி பெருமான்
இயம்பி நின்ற நல்லுரையைக் கேட்டீர் என்றால்
நாம் வீரன் ஆவதற்கு ஏற்ற தொரு
நல் வாய்ப்பைப் பெற்றிடுவீர் ஆமாம் ஆமாம்
போர் முனையில் எதிரிதன்னை வீழ்த்துவது
போற்றுகின்ற வீரமென ஆவதில்லை
ஆம் கெட்ட கோபமதை விட்டு விட்டு
ஆளாகி நிற்பாரே அவரே வீரர்

குறட் கருத்து

பாவங்கள் செய்பவரைப் பாவி என்று
பகர்வதுவே உலகத்தார் பழக்கம் இங்கே
பாவி என்று அழுக்காற்றைப் பகருகின்றார்
பல தெளிவும் உயர் அறிவும் தந்த தந்தை
கூவத்தைப் போல் மனது கொண்டு வாழும்
கூட்டத்தின் பொறாமையினைப் பார்க்கும் போது
ஆபத்தை நமக்குணர்த்த வள்ளுவனார்
அருளிட்ட அக்குறளே நினைவில் வரும்




திருக்குறள்

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும்

குறட் கருத்து

தவநெறியாய் வாழுகின்றார் தம்மைவிடத்
தனி மனிதன் உயர்ந்தவனாய் நிற்பான் என்று
புவனம் எல்லாம் வாழ்வதற்கு வழிகள் சொன்ன
பொது மறையில் வள்ளுவனார் சொல்லுகின்றார்
அவர் உடம்பை வருத்தி உண்ணா நோன்பதனை
அடிக்கடியே மேற் கொள்ளும் அவரை விட
பிறர் சொல்லும் இனிமையற்ற சொற்கள் தன்னை
பெரிதாக்கார் தன் பின்தான் துறவி யென்றார்



பசி தாங்கி பல விதத்தில் தவங்கள் செய்யும்
பரம் தேடி நின்றிருக்கும் தவ நெறியார்
கசிகின்ற காதலிலே கடவுளையே
காலமெல்லாம் நினைக்கின்ற மிகப் பெரியார்
பசி தீர்த்து மற்றவரின் துன்பம் தீர்த்து
பண்பதுவே பசி தீர்த்தல் என்று வாழும்
இசை வாழ்வாய் தன் வாழ்வை மாற்றிக் கொண்ட
எளியார் பின் துறவியரை வைப்பேன் என்றார்


திருக்குறள்

உண்ணாது நோற்பர் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நிற்பாரின் பின்


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

Wednesday, May 20, 2009

சுகம் அவர்க்கு

புரிகின்றார் புரிகின்றார் புரிய மாட்டார்
புரியாமல் போகின்றார் தெரிந்து கொண்டே
அறிகின்றார் அறிகின்றார் அறிய மாட்டார்
அறியாமல் போகின்றார் அறிந்து கொண்டே
சொரிகின்றார் அன்பதனை அறிந்து கொண்டார்
சொல்லுகின்றார் தம் அன்பை நல் மொழியில்
சொறிகின்றார் ஆறாத புண்ணைக் கொண்டோர்
சொறிவதிலே சொறிவதிலே சுகம் அவர்க்கு

Tuesday, May 19, 2009

அனைவருமே ஊமையானார்

இறந்தவர்க்காய் அழுவதுவும் அவருக்காக
இருப்பதுவே தான் என்று புலம்புவதும்
நிரந்தரமாய்த் தமிழர்களின் நடிப்பு இதை
நினையாமல் அனைவரையும் போற்றி நின்றோர்
உளம் துடிக்க இன்று அதைப் புரிந்து கொண்டு
உணர்வாலே துடிக்கின்றார் அய்யோ அய்யோ
களம் காணா வீரர்களைப் போலிகளை
கண்ட பின்னர் அழுகின்றார் என்ன செய்ய


ஊராரின் பிள்ளைகளைத் தீயிலிட்டு
உணர்ச்சி பொங்க அது குறித்து உரை நிகழ்த்தி
சீராய்த் தன் பிள்ளைகளை பத்திரமாய்ச்
சீமானின் பிள்ளைகளாய் வளர்த்திடுவார்
ஆரேனும் தன் பிள்ளை தமிழுக்காக
அழிவதற்காய்க் கொடுத்தாரா இல்லை இல்லை
ஊராரே நீண்ட நாள் நாடகங்கள்
உணர்ந்தார்கள் அனைவருமே ஊமையானார்

Tuesday, May 12, 2009

மறக்க வேண்டாம்

யார் யாருக்கு ஆதரவு புரியவில்லை
யாரோடு யார் இருப்பார் தெரியவில்லை
ஊர் முழுக்கச் சத்தமிட்டு சுற்றி வந்தார்
ஒய்வெடுக்க மாட்டாமல் திணருகின்றார்
சீர் கெடுத்தார் யாரென்று தெரியாராகி
சிந்திக்க முடியாமல் மக்கள் நின்றார்
கார் தந்து வான்மழையைத் தரும் இறையே
காப்பாற்றல் உன் கடமை மறக்க வேண்டாம்

வாழ்வதனால் பதினெண் கீழ்க் கணக்கு கணிமேதாவியார்

எண்ணஞ் சிறியாராய் இருப்பாரை நெருங்காமல்
புண்ணென்னும் உணர்வோடு புலால் தன்னை உண்ணாமல்
வண்ணப் பொய்களையே வாழ்க்கையிலே கொள்ளாமல்
வடிவாக அடுத்தவரின் பொருள்களையே திருடாமல்
எண்ணமெல்லாம் அடுத்தவர்க்கு ஈவதென்று பெருமை கொண்டு
இதயத்தைக் கல்லாக இறுக்காமல் வாழ்பவர்க்கு
பன்னரும் அற நூல்கள் பைந்தமிழில் உள்ளதெல்லாம்
பயனாக ஆகாது அற வாழ்க்கை வாழ்வதனால்


ஏலாதி


குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால் பொய்
மறுகான் பிறர் பொருள் வெளவான் - இறுகானாய்
ஈடுஅற் றவர்க்குஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப பன்னும் இடத்து

Monday, May 11, 2009

போற்றி நிற்கும்

நாள் தோறும் அனைவரிடம் அன்பு செய்யும்
நல்லுறவைத் தந்திட்ட தமிழர் நாட்டில்
பாழ் செய்யும் பழக்கத்தைப் பாவியர்கள்
பரப்புகின்றார் அந்தோ நாம் என்ன செய்ய
தோள் தழுவிக் கருவுற்று பெற்ற அன்னை
தோகைக்கு ஒரு நாளாம் தந்தையர்க்கோ
நாள் என்று ஒன்று உண்டாம் காதலர்க்கும்
நாளொன்றாம் வெவ்வேறாயச் சொல்லுகின்றார்


பாழ்பட்டீர் வெளி நாட்டான் வழக்கையெல்லாம்
பைந்தமிழர் நாட்டினுள்ளே கொண்டு வந்தீர்
சூழ்ந்து நிற்கும் நல்லன்பும் நல்ல பண்பும்
சொத்தாகக் கொண்டீரே என்ன கூத்து
வாழ்நாளில் எந்நாளும் அனைவருக்காய்
வழங்குதற்குச் சொல்லி நின்ற வள்ளுவரின்
ஆழ் மனத்துப் பேரழகே என்றும் எங்கும்
அய்யா நம் பெருமையினைப் போற்றி நிற்கும்

தமிழராவார் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் ஏலாதி பழம் பாடல் புதுக் கவிதை

எளிது எது அரிது எது என்பதனை
ஏலாதி சொல்லுகின்றார் வெண்பா ஒன்றில்
எளிது உடன் சாவதனைத் தேடி விடல்
இருந்து நல்ல கல்வி வழி ஒழுக்கத்தோடு
பொருந்தும் நல்ல வாழ்க்கையதை வாழ்ந்துவிடல்
புகழதனைத் தரும் ஆனால் அது அரிது
இருந்து மண வாழ்க்கையினை அடைந்து விடல்
எல்லார்க்கும் மிக எளிது ஆனால் அந்த


பொருந்தும் மண வாழ்க்கையினைச் சிறந்ததாக்கி
பொறுப்போடு பற்றற்று ஒழுக்கமாக்கி
சிறந்த ஒரு வாழ்க்கையினைச் செப்பமாக்கல்
சிந்தித்தால் மிக மிகவே அரிது ஆகும்
துறந்து விட்டேன் என்று சொல்லி துறவியாதல்
தொல்லுலகில் யாவர்க்கும் எளிது ஆகும்
நிறைந்து அதில் நிற்பதுவும் புலன்கள் தன்னை
நீத்து அதில் வெல்வதுவும் அரிது ஆகும்


திறந்து விட்ட வாய் வழியாய்ப் பலவிதமாய்த்
தேராமல் பல சொல்லல் எளிது ஆகும்
உணர்ந்து அவை அனைத்தையுமே செயலாய் ஆக்கல்
உம்மாலே முடியுமோ அரிதரிது
சிறந்த இந்தச் சேதியில்லாம் ஏலாதியில்
செப்புகின்றார் கணி மேதை எனும் புலவர்
அற நூலாம் இதைத் தமிழர் கற்று விட்டால்
அதன் பின்னர் அவரேதான் தமிழராவார்


ஏலாதி

சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய் போற்றல் - ஆவதன் கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியராய்
வேறல் எளிது அரிது சொல்

Sunday, May 10, 2009

சேர்ப்பது எதற்கு

வங்கிகள் தோறும் பணத்தைச் சேர்த்து
வடிவாய் நிறைய வீடுகள் வாங்கி
தங்களுக்கென்று பல விதமாக
தனித் தனியாக பலவும் சேர்த்து
எங்கு பார்த்தாலும் கடவுள் என்று
இயம்பி நிற்பாரை ஒன்று கேட்பேன்
அங்கவன் தன்னை நம்புவதென்றால்
அடுக் கடுகாகச் சேர்ப்பது எதற்கு

வீரர் இல்லை

கொல்லப்படுவோம் என்று உணர்ந்தும்
கொஞ்சம் கூட அஞ்சா வீரர்
வெல்லல் என்பது அன்பால் என்று
வீரம் அதனைக் காத்தும் நின்றோர்
கல்லாய் இன்றிக் கனியாய் இருந்த
காந்தி எனும் அந்த வீர மகன்தான்
எல்லாருக்கும் தந்தை ஆனால்
எவரும் இங்கே வீரர் இல்லை

Saturday, May 9, 2009

வாக்கைப்போடும்

ஒரு பாடு சின்னங்கள் உண்டு இங்கே
உண்மைக்கு ஒரு சின்னம் எங்கும் இல்லை
தறி பாடு படுகின்றார் ஏழை மக்கள்
தவிக்கின்ற வாய்க்கங்கு தண்ணீரின்றி
கருவாடாய்க் குடல் மாறக் கலங்குகின்றார்
கஞ்சிக்கு வழியில்லை வாக்கு உண்டு
தெருவோடு வருகின்றார் தேர்தல் தோறும்
திரும்பி எல்லாம் வர மாட்டார் வாக்கைப் போடும்

அறிவீர் நீரே

கும்பிட்டு விழுகின்றார் அனைவரையும்
கூப்பிட்டுக் கூப்பிட்டு வணங்குகின்றார்
எம்புட்டு வேணுமோ துட்டுத் தர
ஏற்பாடு உள்ளததைச் சொல்லுகின்றார்
நம்பிட்டு வாக்குக்களை அளிக்கச் சொல்லி
நாய் போல அலைகின்றார் வெயிலில் இங்கு
அம்புட்டுத்தான் தேர்தல் முடிஞ்ச பின்னே
அவர் யாரோ நாம் யாரோ அறிவீர் நீரே

Thursday, May 7, 2009

வாழ்வைக் கொல்ல

யாருக்கும் வெட்கமில்லை என் றுரைத்தார்
எழிற் கவியாம் பாரதியின் தாசனாரும்
ஊருக்கு ஊர் இன்று வெட்கமில்லார்
ஊர்வலங்கள் வருகின்றார் தலைவராகி
நீருக்குள் இருக்கின்ற முதலை கூட
நீங்களாக மாட்டினால் தான் உம்மைக் கொல்லும்
ஊருக்குள் வருகின்றார் உம்மைக் கொல்ல
உண்மை கொல்ல எதிர் கால வாழ்வைக் கொல்ல

வீரர் இல்லை

காந்தி எனும் மாமனிதர் அகிம்சை என்னும்
கனவதனை மெய்யாக்கி வென்ற வீரர்
ஏந்தி நின்ற பதவிக்கு ஏற்றம் தந்து
ஏழையென வாழ்ந்த காமராசர் வீரர்
சேர்ந்து நிற்கும் வறுமை ஒன்றே துணையாய்க் கொண்டு
சீராக வாழ்ந்து வென்ற கக்கன் வீரர்
ஆழ்ந்திதனை உணர்ந்தவர்கள் அறிவார் இங்கு
அவருக்குப் பின்னாலே வீரர் இல்லை

என்றும் வாழ்வார்

மாசில்லா மனத்தோடு வாழ்ந்தாரென்றால்
மறந்தும் அங்கே பொய்யில்லை புரட்டும் இல்லை
தூசு கொண்ட மனத்தோடு வாழ்ந்தாரென்றால்
துன்பம் தரும் பொய் புரட்டே அவரின் எல்லை
காசு மட்டும் வாழ்க்கை என்று வாழ்வாரெல்லாம்
கயமை பொய்மை புன்மை என்றே வாழ்ந்திடுவார்
தேசு புகழ் கொள்வார்கள் எல்லாம் உண்மைத்
தெய்வம் அதை உணர்ந்தாராய் என்றும் வாழ்வார்

Wednesday, May 6, 2009

தமிழ்க்காதல் கொண்ட என் பேரன் திரிபுரசுந்தரத்தோடு

சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கத்தில் தலைவர் கிருஷ்ணசாமியோடு

ஆனந்த பவனம் உணவகத்தில் நண்பர்களோடு

இளைய தலைமுறை

ஆர்வலர்கள்

கையெழுத்து வாங்குகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்

புகழேந்தி அன்பழகன் இராமசாமியோடு

நண்பர் புகழேந்தியோடு

சுவைஞர்கள்

அன்பே வடிவான நண்பர் புகழேந்தியும் தலைவர் இராமசாமியும்

என்னைப் பார்த்துக் கொள்ள என்றே இவர் வந்தாரோ என்று என்னைக் கவனித்துக் கொண்ட அன்புத்தம்பி சண்முகசுந்தரம் பட்டுக்கோட்டையாரின் அண்ணன் மகன்

சுவைஞர்க்கள் கவிஞர் அமலதாசன்

கழனிக் கவி மலரை நான் வெளியிட பண்பின் உருவமான தொழிலதிபர் ஜலீல் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்

அவையை வணங்கி நிற்கின்றேன உடன் கழனிக் கவிமலர் ஆசிரியர் இராமசாமி அன்பழகன் புகழேந்தி்

அமைச்சர் விழா சிறக்க உதவிய தொழிலதிபர் ஜலீல் பாஸ்கர் அவர்களோடு

சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூரில் கலை வளர்க்கும் பாஸ்கரன் அவர்களுடன்

மக்கள் கவிஞர் மன்ற மேதின விழா மேடை சிங்கப்பூர் பெருமாள் கோயில் வளாகம்

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தலைவர் இராமசாமியும் தம்பி பாலுவும்

உணர்வீர் நீரே

உண்மையினை யாரேனும் பேசி விட்டால்
உடனேயே பதறுகின்றார் அய்யோ என்று
நன்மை அது என்பதனால் நடுங்குகின்றார்
நலம் எண்ணார் உடனேயே கலங்குகின்றார்
எண்ணமெல்லாம் நல்லனவே என்று வாழ்வோர்
இதயத்தால் வாழ்த்துகின்றார் மகிழுகின்றார்
உண்மை அது ஒன்றேதான் என்றும் எங்கும்
உலகத்தை வெற்றி கொள்ளும் உணர்வீர் நீரே

மகிழ்வே என்றும்

வாழ்வதற்குப் பணம் தேவை என்றல் விட்டு
வாழ்க்கை அதே பணத்திற்கு என்று வாழும்
கோழைகளின் வாழ்வினிலே இன்பம் இல்லை
குறள் இல்லை தமிழ் இல்லை எதுவும் இல்லை
நாளையல்ல இன்று கூட சொந்தம் இல்லை
நாயகனின் கையில் என்று இனிய தமிழ்
வேளை தோறும் சொல்கிறது புரிந்து கொண்டால்
வேதனைகள் சேராது மகிழ்வே என்றும்

Tuesday, May 5, 2009

என்னுடனே

மக்கள் கவிஞருக்காய் மாபெரிய விழா எடுத்தார்
மனம் விரும்பி எனை அழைத்தார் சிங்கப்பூர் வாழ் தமிழர்
தக்கவனைப் பேசுதற்காய் தமிழோடு சென்றேன் நான்
தழுவி எனை மகிழ வைத்தார் மன்றத்தின் அன்பரெலாம்
பக்கம் இருந் தென்னைப் பாராட்டிச் சீராட்டி
பண்பு நலம் காத்தார்கள் அனைவருமே என்ன சொல்வேன்
தக்க இராமசாமியுடன் தனி அன்புப் புகழேந்தி
தாவி வரும் சிரிப்பழகு முத்துவுடன் காசி யவர்


எக்கணமும் எனக்காக ஒடிவரும் சண்முகமும்
இனிமை நிறை வெங்கடேஷ் எனும் அன்புத் தம்பியுடன்
தக்கவராய் அன்பு செய்யும் கபிலருடன் ராஜாராம்
தமிழ் மறையார் ஒட்டுநரின் தடாலடி அன்பு அதும்
மிக்கவராய் தமிழ் வளர்க்கும் உறரி கிருஷ்ணப் பெரியோரும்
மேன்மை மிகு தைப்பூச அன்பழகன் கடிகாரம்
இக்கணமும் எக்கணமும் என்றென்றும் மறவேன் நான்
இதயத்தில் இருக்கின்றார் அனைவருமே என்னுடனே

Wednesday, April 29, 2009

சேரும்

ஏழைகட்கு உணவளித்தல் அன்பு செய்தல்
என்பதற்கு ஒரு நாளைச் சொல்லி வைத்தார்
பேழைக்குத் தங்கம் வாங்குமென்று எந்தப்
பேடி சொன்னான் என்பதுவே தெரியவில்லை
வேலையற்ற வேலையாக கடனை வாங்கி
விரைகின்றார் தங்கம் வாங்கிச் சேர்ப்பதற்கு
நாளை வாழ்வு நிச்சயமா நினைத்தீரா நீர்
நாயகனின் அருள் இருந்தால் வந்தே சேரும்

பாவம்

அன்பு கொண்டால் பண்பு காட்டி அரவணைத்தால்
அறியாமல் நம்மை ஏய்க்க ஆசை கொள்வார்
தெம்பு கொண்டு அத் தீமை அதை அறிந்தும்
தெரியாமல் செய்கின்றார் என அணைத்தால்
வம்பு செய்யப் பார்க்கின்றார் மீண்டும் மீண்டும்
வாழ்வென்றால் பணம் என்றே நம்புகின்றார்
துன்பம் அதை நம்பிப் பின்னர் துவளுகையில்
துணை தேடி அலைகின்றார் அந்தோ பாவம்

Tuesday, April 28, 2009

தேடிடுங்கள்

நாடகங்கள் நாடகங்கள் நாடகங்கள்
நாடாள நடத்துகின்றார் நாடகங்கள்
ஊடகங்கள் ஊடகங்கள் ஊடகங்கள்
உண்மைக்குப் புறம்பாக ஊடகங்கள்
ஏடெடுங்கள் ஏடெடுங்கள் ஏடெடுங்கள்
எல்லாமே இனம் சார்ந்து சாதி சார்ந்து
வாடிடுங்கள் வாடிடுங்கள் வாடிடுங்கள்
வாடுதற்குப் பிறந்தாரே வாடிடுங்கள்


கூடிடுங்கள் கூடிடுங்கள் கூடிடுங்கள்
கொள்கை நீதி நோக்காமல் கூடிடுங்கள்
பாடிடுங்கள் பாடிடுங்கள் பாடிடுங்கள்
பாரதத் தாய் வாழ்த்தை எங்கும் பாடிடுங்கள்
ஆடிடுங்கள் ஆடிடுங்கள் ஆடிடுங்கள்
அனைவரையும் கேட்டு நன்கு ஆடிடுங்கள்
தேடிடுங்கள் தேடிடுங்கள் தேடிடுங்கள்
தேர்தலுக்குப் பின்னாலே தேடிடுங்கள்

Friday, April 24, 2009

வய்ப்பளிப்பீர்

வாக்களிக்க விரும்பாமல் பல பேர் இங்கு
வருத்தத்தில் ஒதுங்குகிறார் நாடு மேலும்
போக்கழிந்து போவதற்கு அவரைப் போலப்
பொறுப்பற்றோர் காரணமாய் ஆகி நின்றார்
ஆக்கம் பெற நம் நாடு மேலும் வாழ
அறிவுடையோர் நற்றலைமை மீண்டும் வர
வாக்களிப்பீர் அனைவருமே வாக்களிப்பீர்
வரலாற்றை மாற்றுக்கின்ற வாய்ப்பளிப்பீர்

Wednesday, April 22, 2009

காயப் போகுது

சேலையெல்லாம் கொடிகளாகி தெருவெங்கும் பறக்குது
சேலைக்காக ஏங்கும் கூட்டம் தெருவோரம் கிடக்குது
நாளை வாழ்வு என்ன என்று தெரியாமல் தவிக்குது
நாடாள அலையும் கும்பல் வாக்குக் கேட்டு நெருக்குது
பேழைப் பணங்கள் வெளியில் வந்து பெரும் போடு போடுது
பிச்சைக்கார வேஷம் போட்டு பெரிசு எல்லாம் அலையுது
நாளை எல்லாம் முடிந்த பின்னர் நாடாளப் போகுது
நாட்டில் உள்ள ஏழைகளின் வயிறு காயப் போகுது

Sunday, April 19, 2009

வெற்றி காண்போம்

தந்தை தாய் இருவரும் தான் நாமே நேரில்
தான் கொண்டு வணங்குதற்கு ஏற்ற தெய்வம்
சிந்தையிலே இதைக் கொண்டு வாழ்வார் வாழ்க்கை
சிறப்பாகத் தெய்வ பலம் தன்னைச் சேர்க்கும்
முந்தி இதைத் தமிழ்த் தாயாம் அவ்வை என்னும்
முது பெரிய கிழவி அவள் சொல்லி வைத்தாள்
அந்தியிலும் சந்தியிலும் அன்னை தந்தை
அவர்களையே வணங்கி நின்று வெற்றி காண்போம்

நம்மைச் சேர்ப்பான்

உழைத் ததனால் வாழ்வாரே வாழ்வா ராவார்
ஊர் அவரைப் போற்றி நிற்க உயிராவார் காண்
பிழைப் பதற்காய் வாழ்கின்றார் வாழ்வாரல்லர்
பிழையாகி ஊர் முன்னர் குனிந்து நிற்பார்
அழைப்பதற்கு ஒருவன் உண்டு என்றுணர்ந்தார்
அன்பு வடிவாகி நின்று இன்பம் சேர்ப்பார்
குழை மனத்தால் கும்பிட்டு உருகி நின்றால்
கூத்தாடும் பேரிறைவன் நம்மைச் சேர்ப்பான்

Saturday, April 18, 2009

வாழ்த்துறார்

உறவானார் எழுதினால் ஒசத்தி என்றும்
ஊரார்கள் எழுதினால் தாழ்ச்சி என்றும்
கரவாக வாழ்கிறார் சில பேர் இங்கே
கவி போல ஆடுறார் அந்தோ பாவம்
திறமானார் எழுத்தினைக் கண்டால் போதும்
திருடர்கள் குதிக்கின்றார் அய்யோ என்று
வரமாக வந்தாரோ இவரைக் கண்டால்
வாயார வாழ்த்துறார் வாழ்க என்று

கம்ப இராமாயணம் பழம் பாடல் புதுக் கவிதை

சூர்ப்பனகை இராவணனிடம்
காமன் என்றால் ஒருவன் தான் அவனும் தான் இங்கே
கை கட்டி நிற்கின்றான் உன்னிடத்தில் என்றால்
யான் கண்டேன் இரு காமன் ஒரிடத்தில் வாழ
யார் அவர்க்கு இணையாவர் எவரும் இலை அண்ணா
தாமவர் தம் கை வில்லின் ஆற்றலினை விஞ்ச
தரணி இதில் வீரரென ஒருவருமே இல்லை
ஆம் அவர்கள் இருவருமே சிவன் திருமால் பிரம்மா
அனைவரையும் ஒத்தவராய் நிற்கின்றார் கண்டேன்

கம்பன்

மாரர் உளரே இருவர் ஒருலகில் வாழ்வார்
வீரர் உளரோ அவரின் வில் அதனின் வல்லார்
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் அய்யா
ஒர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்

Friday, April 17, 2009

பழம் பாடல் புதுக் கவிதை கம்ப இராமாயணம்

சீதை கூடப் பார்க்காத புதுக் கோணத்தில்
ஸ்ரீராமன் தனைப் பார்த்தாள் சூர்ப்பனகை
போதையிலே மிதக்கிறவள் என்றால் கூட
புது விதமாய்ச் சுவைக்கின்றாள் இராமன் தன்னை
பாதையிலே நிற்கின்ற இராமன்தன்னைப்
பார்க்கின்றாள் மரவுரியில் தவக்கோலத்தில்
ஏது தவம் செய்ததந்தத் தவமே இவன்
ஏற்று அதைச் செய்வதற்கு வியந்தே வீழ்ந்தாள்


கம்பன்
எவன் செய இனிய இவ்வழகினை எய்தினோன்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள்

குறளும் திருமந்திரமும்

ஏழைக்கு ஈவதே ஈகை மற்றெல்லாமும்
நாளைக்கு வரும் என்று நம்பியங்கு தருவதுதான்
பேழைக் குறளுக்குள் வள்ளுவனார் பேசுவது
பெரு முனிவர் திருமூலர் அதையேதான் சொல்லுகின்றார்
கோழைக் குணத்தார்க்கு ஒழுக்கம் விட்ட மானிடர்க்கு
கூட்டாக நோன்பதனைக் கைக் கொள்ளா தீயருக்கு
ஆளை அறியாமல் ஈவதனைத் தவறென்று
ஆணி அடித்தாற் போல் அடிக்கின்றார் ஒங்கியங்கு


புல்லறுத்துப் போட்டு பொறுப்பாய்த் தழைகளிட்டு
நல்ல விதம் நீங்கள் நாள் தோறும் பார்த்தாலும்
வல்ல மலடாக வந்து விட்ட பசு மாட்டில்
நல்லதாய்ப் பால் கறந்து நாம் அருந்தக் கூடுமோ?
அல்லதொரு காலத்தில் சென்று பயிரிட்டு
அறுவடைக்குச் சென்று நிற்றல் அறிவுடைமை ஆகுமோ
நல்லவர்க்கு ஈதலே நாதனுக்கு மகிழ்ச்சி தரும்
நலம் சேர்க்கும் என்றிங்கு திருமூலர் சொல்கின்றார்

திருமந்திரம்
அபாத்திரம்

கோல வறட்டைக் குனித்துக் குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதேயொக்குஞ்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலம் கழிந்த பயிரதுவாகுமே

Wednesday, April 15, 2009

சுவைஞர்கள் இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்

சுவைஞர்கள் திருவள்ளுவர் மன்றம் இராசபாளையம்

இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம் வழக்காடு மன்றம் உடன் சுபாஷ் சந்திர போஸ் திருமதி சுப்புலட்சுமி

Monday, April 13, 2009

காரைக்குடி கம்பன் கழகம் பட்டிமன்றம் 08/04/09 மரபின் மைந்தன் ம.முத்தையா

காரைக்குடி கம்பன் கழகம் பட்டிமன்றம் 8/04/09

போற்றியே பணிந்து நிற்கும்

தாயினை வணங்கி நின்று தந்தையினைத் தொழுது நின்று
ஆய கலைகள் அனைத்தையுமே கற்று நின்றால்
போய்ப் பெறுவீர் நீவீர் பொறுப்பான புகழிடங்கள்
பூமியெல்லாம் உமை வணங்கி போற்றியே பணிந்து நிற்கும்

Friday, April 10, 2009

ஒழிஞ்சே போவோம்

ஏழ்மையினை ஒழிப்பதுவாய்ச் சொல்லி விட்டு
ஏழைகளை ஒழிக்கின்றார் சாதி சொல்லி
கோழைகள் தான் வீரர்கள் போல் அவர்கள் போடும்
கூத்தாட்டம் தாங்கவில்லை என்ன செய்ய
வாழையடி வாழையென இவர்கள் செய்யும்
வதை தாங்கிப் பழகி விட்டார் நமது மக்கள்
நாளை மறு நாள் வரும் இத் தேர்தலிலும்
நாட்டு மக்கள் வாக்களிச்சு ஒழிஞ்சே போவோம்

நம் கடமை

பேச்சு மாறா நம் தலைவர் தம்மைக் கண்டால்
பெருமை கொண்டு மகிழ்கின்றோம் இந்தியர்கள்
காச்சு மூச்சு என்று எதும் புதிதாய்ச் சொல்லி
கண்ணியத்தைக் குறைக்காமல் மீண்டும் மீண்டும்
வாச்ச அந்தப் பழைய தேர்தல் அறிக்கை தன்னை
வளம் பெருக்கி அவர் வாழத் தந்து உள்ளார்
பேச்சு மூச்சு இல்லாமல் வாக்கைத் தந்து
பெருமையுடன் அழிவதுவே நம் கடமை

Thursday, April 9, 2009

ஏங்குகின்றோம்

சாதியினை ஒழிப்பதுவாய்க் கொள்கை சொன்னார்
சாதி தோறும் வேட்பாளர் போடுகின்றார்
ஆதித் தமிழ்க் குடும்பம் தன் குடும்பம் என்று
ஆடியவர் தன் குடும்பம் பேணுகின்றார்
வாதிப்பார் யாருமில்லை அனைவருமே
வளம் சேர்த்து வாழ்வார் முன் மண்டியிட்டார்
சோதிப் பெருங்கடலே எம்மிறையே உம்
சூட்சுமத்தை அறியாமல் ஏங்குகின்றோம்

நல்ல வாழ்க்கை

பணம் மட்டும் வாழ்க்கைஎன்று எண்ணி நிற்பார்
பலபேர்க்கு அஞ்சி அஞ்சி வாழுகின்றார்
குணம் ஒன்றே மனிதரென வாழ வைக்கும்
கொள்கை கொண்டோர் அனைவருக்கும் அன்பு செய்வார்
நினைத்ததினை வாழ்வதற்குப் பழகி விட்டால்
நிம்மதியே மிகச் சிறந்த சொத்தாய் ஆகும்
அனைத்துலகும் நமை உறவாய் ஏற்றுக் கொள்ளும்
அதுதானே தமிழ் அளித்த நல்ல வாழ்க்கை

Saturday, April 4, 2009

குறட் கருத்து அதிகாரம் 45 பெரியாரைத் துணைக் கோடல்

அற வழிதான் வாழ்க்கைக்கு ஆக்கங்கள் தரும் என்று
அவ்வழியைத் தம் வழியாய்க் கொண்டொழுகும் பெரியோரை
உறவாக்கி அவர் காட்டும் உயர் வழிகள் தனில் நடத்தல்
உற்றாராய் ஆட்சியிலே இருப்பாரின் பெருங் கடமை
திறமாக இதைக் கொண்டு தெளிவாக ஆளுபவர்
தெய்வமென ஆவார்கள் மக்களுக்குப் புரிவாரா?
அறமெல்லாம் தெளிவாக ஆக்கிவைத்த வள்ளுவனாம்
அப்பெரியார் துணை கொள்ளல் அழகான நல் வழியே

பெரியாரைத் துணைக் கோடல்
அதிகாரம் 45
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்

Friday, April 3, 2009

குறட் கருத்து அதிகாரம் 108 இரவு

இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

அதிகாரம் 108
இரவு
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஒர் ஏஎர் உடைத்து

குறட் கருத்து அதிகாரம் இரவு 108ம் அதிகாரம்

இரந்து நிற்பார் ஈவாரே ஆவாராம் ஆம்
இனிய தந்தை வள்ளுவனார் சொல்லுகின்றார்
சிறந்து நிற்கும் இப்படியோர் சிந்தனையை
செப்புதற்கு அவரன்றி யார்தான் உண்டு
மறந்தும் தம் கனவினிலும் செல்வம் தன்னை
மறைக்காமல் வெளிப்படையாய் வாழ்வார் தம்மை
இரந்து அவர் உடன் கொடுக்கும் மாண்பதனை
எல்லோரும் உணரும் வாய்ப்பைக் கொடுக்கின்றாராம்


இரந்தவரே கொடுக்கின்றார் என்ற செய்தி
இதோ இந்தக் குறள் வழியே வருகின்றது

அதிகாரம் 108
இரவு
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

Wednesday, April 1, 2009

உயர்வீர்

புலன்களையே வென்று நிற்கும் துறவியரை
பொறுப்பான நல் மனிதர் தமக்குப் பின்னே
உளர் என்று வள்ளுவரும் சொல்லுகின்றார்
உலகுக்கு வழிகாட்டும் பொதுமறையில்
வளர்கின்ற பசிதன்னைப் பொறுத்து வெல்லும்
வடிவான துறவியரை விடவும் மற்றோர்
தளர்வானின் பசி தன்னைத் தீர்த்து வைக்கும்
தனி மனிதர் மிக உயர்ந்தார் என்றே சொன்னார்


உண்ணாமல் அதே நோன்பாய்க் கொண்டுயரும்
உயர் துறவிக் கூட்டத்தைக் கண்டு சொன்னார்
எண்ணுதற்கு உயர்ந்தாற்போல் தோன்றும் இவர்
எதிரிகளின் பண்பற்ற சொற்கள் தன்னை
இன்னாதாய்க் கொள்ளாமல் முக மலர்ந்து
ஏற்று அதன் பின்னாலும் நன்மை செய்யும்
நல்லாராம் அவர் பின்னால் ஆமாம் ஆமாம்
நாட்டாரே உதவி செய்யும் உயர்வீர் என்றார்


ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்

Saturday, March 28, 2009

பழம் பாடல் பட்டினத்தார்

இறுதி வரை மனிதருக்குள் இருக்கும் அந்த
இன்ப விழைவொன்றாலே தடுமாறித்தான்
உறுதிப் பொருள் ஆன நந்தம் இறைவன் தன்னை
உள்ளத்துள் கொள்ளாராய் மனத்திற்குள்ளே
குருதியுடன் சீழுடனும் தான் பிறந்த
குமைக்கின்ற குறியதனை எண்ணுகின்றார்
தரும் கல்விக்கண்கள் அவை இரண்டினாலே
தகி மார்பே தேடுகின்றார் அய்யோ அய்யோ

பட்டினத்தார்
சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம்பலம் தேடி விட்டோமே-நித்தம்
பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்

Friday, March 27, 2009

பொறுத்திருப்போங்க

வேட்பாளர் சொத்துக் கணக்குக் காட்டிடு வாங்க இங்க
காட்டிடுவாங்க அதில்
விதம் விதமாய்ப் பட்டியலைப் பாத்திடலாங்க

சாப்பாட்டுக் கில்லாமல் சாலையோரத்தில் நமது
சாலையோரத்தில்
சங்கடங்கள் படுவார்க்காய் இவர்கள் வாராங்க

பாட்டனது காலத்திலே சோறு இல்லாம திங்கச்
சோறு இல்லாம
பரிதவச்ச பழைய நெலம மறந்து போட்டாங்க

ஆட்டம் போட்டுக் கோடிக் கணக்கில் அள்ளிக் கிட்டாங்க
ஆமா அள்ளிக் கிட்டாங்க
ஆரம்பத்தில் துணியுமின்றி அலஞ்சிருந்தவங்க

பாட்டன் பூட்டன் பரம்பரையே ராஜ பரம்பரை
ஆமா ராஜ பரம்பரை என்று
பல விதத்தில் சேதி சொல்லி பரிதவிப்பாங்க

ஆட்டம் இந்த ஆட்டம் இது நடக்கட்டுங்க
ஆமா நடக்கட்டுங்க
ஆண்டவனார் தீர்ப்பு உண்டு பொறுத்திருப்போங்க

ஆட்சிசெய்வாங்க

கூட்டணிகள் மாறுவதில் ஒண்ணுமில்லீங்க இங்க
கொள்கையில்லாக் கூட்டணியில் சத்து இல்லீங்க
வாக்கணியாய் மாறி இவர் வாழப் பாக்காங்க நாம
வறுமை இன்மை எல்லாம் பாக்க நேரமில்லைங்க
தோக்கடிக்க முடியாம தோத்துப் போறோங்க நாம
தோத்துப் போறோங்க இவர்
துளிக் கூட வெட்கமின்றி ஆட்சி செய்வாங்க
தூத்தூ ஆட்சி செய்வாங்க

Thursday, March 26, 2009

பாத்துப் புட்டீங்க

வாக்குத் தாருங்க அய்யா வாக்குத் தாருங்க தலைவர்
வளம் சேர்த்து வாழ ஒங்க வாக்கைத் தாருங்க
நோக்கம் போலங்க ஒங்க நோக்கம் போலங்க
நோட்டுக்களை நாங்களுமே தந்திருவோம்ங்க
பாக்கப் போறீங்க நீங்க பாக்கப் போறீங்க
பலவிதமாய் அறிக்கைகளைப் பாக்கப் போறீங்க
போக்குக் காட்டத் தான் அதெல்லாம் போக்குக் காட்டத்தான்
புரியாமலா தேர்தல் எத்தனை பாத்துப் புட்டீங்க

Wednesday, March 25, 2009

வாழுகின்றார்

தவறாகப் பொருளீட்டி வாழ்வோரெல்லாம்
தனியாக வாழ்கின்றார் மனத்திற்குள்ளே
அவமானம் உணர்ந்தேதான் வாழுகின்றார்
ஆனாலும் பணம் சேர்க்க ஒடுகின்றார்
குலமானம் இனமானம் வாழ்வின் மானம்
கூட்டாக்க முடியாமல் கலங்குகின்றார்
பணமான துன்பத்தால் என்றும் எங்கும்
பரிதாபமாகவே வாழுகின்றார்


சேர்த்துள்ள பணத்தாலே தாம் விரும்பும்
சீரான பொருள் யாவும் வாங்குகின்றார்
பார்த் தெவரும் போலியாய் வணங்கி நின்றால்
பாவத்தை மனத்துக்குள் எண்ணுகின்றார்
ஆர்த்தாலும் பேர்த்தாலும் உலகம் தம்மை
அவமானமாகத் தான் பார்க்குமென்று
வேர்த்தாராய் மனத்துக்குள் அழுதழுது
விரும்பாத வாழ்க்கையதை வாழுகின்றார்

Tuesday, March 24, 2009

துட்டைத் தாங்க

ஆடுங்க பாடுங்க கொண்டாடுங்க
அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் திண்டாடுங்க
கூடுங்க கூட்டணியாய் ஏமாத்துங்க
கொடுப்பதற்காய் வாக்களிப்பார் எங்காளுங்க
சோறுங்க தண்ணிங்க எல்லாம் தாங்க
சொத்தை எல்லாம் நீங்களேதான் சேத்துக்குங்க
ஊருக்குத் தண்ணி வேண்டாம் பள்ளி வேண்டாம்
ஒங்களுக்கே வாக்களிப்போம் துட்டைத் தாங்க

மறந்திடுங்க ஜோரா

வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வளமெல்லாம் வெளியில் வர வந்திருச்சு தேர்தல்
வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வன்முறையைத் தூண்டி விட வந்திருச்சு தேர்தல்
வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வாய்ச் சால வீரருக்காய் வந்திருச்சு தேர்தல்
வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வடிவழகு நடிகையருக்காய் வந்திருச்சு தேர்தல்



வருங்கால வாழ்க்கைக்காய் வந்திருச்சு என்று
வாய்ச் சால வீரர்களும் வழியெல்லாம் சொல்வார்
தருங்காலம் என்று இதை ஏழையர்கள் எல்லாம்
தருவதையே பெற்று தங்கள் எதிர்காலம் கொல்வார்
பெறும் காலம் என்று தங்கள் கள்ளப் பணம் எல்லாம்
பிரியமுள்ள தலைவர்களும் அள்ளி அள்ளித் தருவார்
கருங்காலம் நம் நாட்டின் எதிர்காலம் எல்லாம்
காந்தி காமராஜர் எல்லாம் மறந்திடுங்க ஜோரா

ஜிங்கு ஜிக்காம் ஜிங்கு ஜிக்காம் ஜிங்கு ஜிங்குச்சாம்

அங்க இங்க கூத்தணியாய் மாறிக் கிறாங்க
அய்யோ பாவம் தமிழன் மானம் தெருவில் கிடக்குது
பொங்கல் வைத்துக் கிடா வெட்டும் போக்கு அது மட்டும்
பொதுத் தேர்தல் என்ற பெயரில் மீண்டும் நடக்குது
சங்கறுக்க வாராங்க என்று தெரிந்துமே எங்க
சனங்க மட்டும் திரும்பத் திரும்பத் தலை கொடுப்பாங்க
திங்கதுக்குச் சோறு தந்தா தின்னுக்குவாங்க
தேர்தல் தோறும்பரிசுகளை வாங்கிக்குவாங்க
ஜிங்கு சக்காம் ஜிங்கு சக்காம் ஜிங்கு ஜிங்குச்சாம்
ஜிங்கு சக்காம் ஜிங்கு சக்காம் ஜிங்கு ஜிங்குச்சாம்

மீட்டுத் தாருங்க

காந்தித் தாத்தா காந்தித் தாத்தா ஒங்களைத்தானே
கையெடுத்துக் கும்பிடுதோம் ஏழைக நாங்க
ஏந்தி நீங்க வாங்கித் தந்த விடுதலை தன்னை
ஏய்ப்பவர்கள் தங்களுக்கு எடுத்துக்கிட்டாங்க
மாஞ்சு மாஞ்சு நாங்களுமே வாக்களிக்கிறோம்
மறுபடியும் மறுபடியும் தவறு செய்வோர்க்கே
வேண்டி நின்றோம் ஒங்களையே மீண்டும் வந்து எம்
விடுதலையை எங்களுக்கே மீட்டுத் தாருங்க

Monday, March 23, 2009

நெஞ்சம் பதறுதே

கூட்டணியாய்க் கூட்டணியாய்க் கூட்டமாய் வருவார்
இவர் கூட்டணியாய் வருவார்
கொள்கை கொடி என்றெல்லாம் கோஷங்கள் இடுவார்
இவர் கோஷங்கள் இடுவார்
நாட்டணியாய் இன்றும் வாழும் நல்லவரெல்லாம்
அந்த நல்லவரெல்லாம்
நாணிக் கோணித் துன்பமுற வேடங்கள் கொள்வார்
இவர் வேடங்கள் கொள்வார்
பாட்டனாக பெருமை சேர்த்த காந்தி மகானை
அந்த காந்தி மகானை
பைத்தியம் போல் ஆக்கி இவர் பதவிகள் கொள்வார்
இவர் பதவிகள் கொள்வார்
கேட்க இங்கு யாருமில்லை யாருமில்லையே
ஆமாம் யாருமில்லையே இந்தக்
கேடு கெட்ட மனிதர் ஆட்டம் ஒயவில்லையே
இன்னும் ஒயவில்லையே
பாட்டுப் பாடி இவரையுமே புகழுகின்றாரே
சிலர் புகழுகின்றாரே அந்தப்
பாவிகளைக் காண்கையிலே நெஞ்சம் பதறுதே
நமது நெஞ்சம் பதறுதே

அஞ்சிச் சாவோமே

வாக்களித்து வாக்களித்து ஒஞ்சு போவீங்க
நீங்க ஒஞ்சு போவீங்க
வகை வகையாய் ஜெயித்து மேலும் சேர்த்திடுவாங்க
அவங்க சேர்த்திடுவாங்க
போக்களிந்த வாழ்க்கை யிதைத் தருவதற்காக
நமக்குத் தருவதற்காக
பொக்கை வாயின் கிழவர் காந்தி பொய்யொழித்தாரே
ஆமாம் பொய்யொழித்தாரே
நாக்கை மட்டும் நம்பி வாழும் நாசகாரர்கள்
இந்த நாசகாரர்கள்
நாட்டை விற்றுத் தாங்கள் வாழக் கூட்டுச் சேர்வாரே
ஆமாம் கூட்டுச் சேர்வாரே
வாக்களித்து நமது உரிமை தனை இழப்போமே
நாமும் நமை இழப்போமே
வந்தவர்க்கும் செல்பவர்க்கும் அஞ்சிச் சாவோமே
நாமும் அஞ்சிச் சாவோமே

Friday, March 20, 2009

அடிமையாகுங்க

வாக்குச் சீட்டு வைத்துள்ளார் அனைவரையும்
வருக வருக என்றே வரவேற்கின்றோம்
ஆக்குகின்றோம் சோறு எல்லாத் தொகுதியிலும்
அன்பாகப் பரிமாற ஆளும் உண்டு
நாக்குக்கு ருசியாக கறி வகைகள்
நாற்புறமும் ஆடு கோழி அனைத்தும் வாங்கி
கோக்கு மாக்கா அறுத்துள்ளோம் உங்களுக்காய்
கூட்டமாகத் தின்னுட்டு வாக்கைத் தாங்க


வெற்றி பெற்ற பின்னாலும் சோறு தருவோம்
வீடு வீடாய் வாருங்க தின்னுட்டுப் போங்க
கட்டு கட்டாய்ப் பணமும் வரும் கவலை வேண்டாம்
கணக்காக வாக்கை மட்டும் போட்டுட்டுப் போங்க
எட்டுத் திக்கும் எங்களுக்கு வெற்றி வேணும்
எம்புட்டுத் துட்டுன்னாலும் தந்திருவோங்க
சத்தியத்தார் காந்தி படம் போட்ட நோட்டு
சட்டுன்னு வாக்களிங்க அடிமையாகுங்க

போற்றி நிற்போம்

தமிழ் கற்றார் தன் நிலையை இழப்பதில்லை
தனக்காகப் படித்தாரே தாழ்ந்து நின்றார்
அமிழ்தல்ல நந்தம் மொழி அனைவருக்கும்
அன்னையெனச் சோறூட்டும் அன்பு மொழி
உமிழ் நீரும் தேனாக்கும் அன்பு மொழி
உலகு காக்கச் சொல்லி நிற்கும் தாயின் மொழி
கமழ்கின்ற சந்தனமா இல்லை யில்லை
கண்ணீரைத் துடைக்க வந்த கருணை மொழி


எந்நாடும் நம் நாடு உலக மக்கள்
எல்லாரும் நம் உறவு என்று சொன்ன
பன்னாட்டுச் சிந்தனையை உலகுக்கீந்த
பனிக் கணியன் பூங்குன்றன் நந்தம் தாத்தா
சொன்னார்கள் நல்லதெல்லாம் உலகம் வாழச்
சொன்னார்கள் நமக்கென்று மட்டுமின்றி
கண்ணாகப் போற்றி அந்த வழியில் வாழ்ந்து
கண்ணியத்துத் தமிழ் அன்னை போற்றி நிற்போம்

Thursday, March 19, 2009

தேர்தல் வெல்க

மக்களாட்சி மலர்வதற்காய் தேர்தல் என்னும்
மாபெரிய கடமையினை ஆற்ற வேண்டும்
இக்கணமே அனைவருமே எழுந்து நிற்பீர்
இனிய அந்த பொத்தானை அழுத்தித் தோற்பீர்
தக்கவர்கள் தகாதவர்கள் என்று எல்லாம்
தடுமாறித் தொலையாதீர் தலைவர் தங்கள்
மக்களவர் ஆட்சி அது மலர்வதற்காய்
மனம் கொண்டு நடத்துகின்ற தேர்தல் வெல்க

வாக்கை அளியும்

காந்தி வந்திருவார் மாமா நேரு வந்திருவார்
கண்ணியத்துக் காமராஜர் தானும் வந்திருவார்
ஏந்திழையார் அன்னை இந்தி ராவும் வந்திருவார்
இழநத இனிய தலைவர் ராஜீவ் காந்தி் வந்திருவார்
சேர்ந்து வந்திருவார் சுவ ரொட்டிகள் தோறும்
சிரித்த முகத்தில் வாக்கு கேட்க வந்து நின்றிடுவார்
ஆய்ந்து பாருங்கள் இவர்கள் அத்தனை பேரும்
அடுத்த தேர்தல் வந்தவுடன் மீண்டும் வந்திடுவார்


ஆய்ந்தறிந்த தந்தை பெரியாரும் வந்திடுவார்
அவரோடு அறிஞர் அண்ணா தானும் வந்திடுவார்
ஒய்ந்த ஏழைக்கான காரல் மார்க்சும் வந்திடுவார்
உத்தமராம் அம்பேத்கார் தானும் வந்திடுவார்
தேர்ந்த ஞானத் தேவர் மகன் தெய்வமாய் வருவார்
தீன் காயிதே மில்லத் தானும் வந்திடுவார்
பாந்தமாக இரு அணியும் இவர்கள் படம்
பத்திரமாய் அச்சடிக்கும் வாக்கை அளியும்

Wednesday, March 18, 2009

வெல்க தேர்தல்

மதச்சார்பு அது அற்ற இன்னொரு சார்பு
மாபெரிய சிந்தனையின் மூன்றாம் சார்பு
சத குப்பையாக தனிச் சாதிச் சார்பு
சாதனையே அணி மாறல் சார்பு என்று
விதம் விதமாய் புறப்படுது சார்பு எல்லாம்
வேட்பாளர் தேர்வு அதும் சாதிச் சார்பு
பதப் பட்ட மக்கள் எதும் பார்ப்பதில்லை
பக்குவமாய் வாக்களிப்பார் வெல்க தேர்தல்