Thursday, March 29, 2012

கண்ணதாசன் கட்டுரைகள்

இதய கமலம் என்ற படத்தில் காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி பாடும் பாடல் ஒன்று.கவியரசர் கவியரசர் தான் என்று பறை சாற்றும் பாடல்.

தாயின் கருப்பையிலிருந்து மண்ணிற்கு வருகின்ற குழந்தை கண்
திறந்ததா என்று அனைவரும் காத்திருப்பார்கள். குழந்தை கண் திறந்ததை அம்மாதான் முதன் முதலில் பார்ப்பாள். பின்னர் ஒவ்வொருவராகப் பார்த்து மகிழ்வார்கள். பிறகு குழந்தை முகம் பார்க்கிறது என்று பெருமைப் படுவார்கள். பிறகு அப்பாவை குழந்தைக்கு அடையாளம் தெரிகின்றது மாமாவை அடையாளம் தெரிந்து கொள்கின்றதென்றெல்லாம் மகிழ்வார்கள். அந்தப் பெண் குழந்தையும் அப்படி எல்லா மகிழ்ச்சியையும் தாய்க்கும் தந்தைக்கும் உறவினர்களுக்கும் தந்தவள் தான்.

அந்தக் கண்களால் உலகைப் பார்த்து இயற்கையைப் பார்த்து மகிழ்ந்தவள்தான் கிளியை மைனாவை குயிலை மயிலை சிட்டுக் குருவியை ஆடு மாடு மான் என்று பார்த்து மகிழ்ந்தவள்தான்.

கண்ணான கல்வியைக் கற்றுத் தேறியதும் அந்தக் கண்களினால்
தான். அவள் பாட்டி அவள் கண்களின் அழகுக்கே திருஷ்டி சுற்றியது பலமுறை. இப்படியெல்லாம் உறவை உலகை கல்வியைக் காட்டித் தந்த கண்ணை அவள் கண்ணேயில்லை என்கின்றாள் . ஆமாம் அவள் மனம் கவர்ந்தவனைக் காண வாய்ப்பில்லாமல் போன கண்களையெல்லாம் கண்களே யில்லை என்கின்றாள்.

ஆமாம் உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
என்று.

Tuesday, March 27, 2012

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்



தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்

தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

Sunday, March 25, 2012

புரியவில்லை

சச்சின் நூறாவது நூறு அடித்து விட்டார். அதனால் தான் வங்க தேசத்திடம் தோற்றோம் என்பதனை யாருமே சொல்ல மாட்டேன் என்கின்றார்களே.ஏன்.

ஆளும் கட்சி இடைத் தேர்தலில் வெல்லுவது ஒன்றும் புதிதில்லை என்கின்றார் கருணாநிதி.

அவர் தமிழ்நாட்டிலேயும் காங்கிரஸ் கட்சி மத்தியிலேயும் ஆட்சியில் இருந்த போதுதான் திண்டுக்கல் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர்.அவர்களின் அண்ணா தி மு க எதிர்த்து நின்ற திமுக பழைய காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் அனைவரும் வாங்கிய வாக்குக்களை கூட்டிப் பார்த்தால் அதுதான் வெற்றி பெற்ற அண்ணா திமுக வேட்பாளர் மாயத் தேவருக்கும் அடுத்து வந்த திமுக வேட்பாளருக்கும் இடையிலான வித்தியாசம்.இரண்டு ஆளும் கட்சியினரையும் எம்.ஜி.ஆர். தோற்கடித்திருக்கின்றார் என்பதை எப்படி பெரியவர் மறந்து போனார்.

காங்கிரஸின் தோல்வி குறித்து வாய் கிழியப் பேசும் தொலைக் காட்சி அறிவாளிகள் பாரதீய ஜனதாவின் தோல்வி குறித்துப் பேச மாட்டேனென்கின்றனரே ஏன்.

Thursday, March 22, 2012

வெளிநாட்டில்

அன்பே வடிவான தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் தமிழ்ச்சங்கம் மூலமாக உரை நிகழ்த்த அழைக்கும் போது மிகவும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

நான் முதன் முதல் போன வெளிநாடு இலங்கை. கொழும்பில் நடைபெற்ற கம்பன் கழக அழைப்பில் சென்றேன்.பெரியவர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களும் அந்த ஆண்டு வந்திருந்தார்.

வழக்காடு மன்றம் கவியரங்கங்களுக்கு தலைமை ஏற்றேன்.
கவியரங்கத்தை வீரகேசரி தினகரன் நாளிதழ்கள் முப்பது வருடத்தில் உச்சமாக அமைந்த கவியரங்கம் என்று போற்றின.

மீண்டும் ஒரு முறை மறைந்த விநோதகன் அவர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.தம்பி இதயானந்தா இன்றும் இங்கிலாந்து வந்த பிறகும் என்னோடு தொடர்பில்
இருக்கின்றார்.

அதன் பின்னர் மலேசியா சென்றேன்.இரண்டாம் முறை சென்ற போது அமைச்சர் டத்தோ சரவணன் அழைத்திருந்தார்.என்னை அப்பா என்றே இன்றும் அழைக்கின்றார்.

அதன் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் சென்றிருந்தேன். பெரியவர் சலாவுதீன் வீட்டில் இரவு உண்விற்குச் சென்றிருந்தேன். இரவு நெடு நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.சில தமிழ்ச் செய்யுள்களை என்னிடம் கேட்டு பெரியவர் சலாவுதீன் அவர் கைப்பட எழுதி கொண்டார்.

அதன் பின்னர் சிங்கப்பூருக்கு பட்டுக்கோட்டையாரின் நண்பர்கள் அழைத்திருந்தனர். மிக மிக பண்பும் மரியாதையும் கொண்டவர்களாக ந்டந்தனர். இன்று வரை இராமசாமியும் புகழேந்தியும் காசியும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்.

அதன் பின்னர் குவைத் தமிழ்ச்சங்கத்து இளைஞர்கள் அழைத்து (தமிழுக்காக மட்டும்) மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினர். தமிழுக்காகவே வாழ்ந்த தேவநேயப் பாவாணர் அவர்களுடைய மாணாக்கர் பெரியவர் இரா.மதிவாணன் அவர்களும் என்னோடு கலந்து கொண்டார். எனக்கு மிகச் சிறந்த பிள்ளைகள் கிடைத்தனர். இது வரை என்னோடு தொடர்பில் இருக்கின்றனர்.

தமிழ்ச்சங்கங்கள் திரைப்படக் கலைஞர்களை அழைத்து அவர்களோடு புகைப் படங்கள் எடுத்துக் கொள்வதிலேயே ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். திரைப் படக் கலைஞர்களும் தமிழுக்காகச் சேவை செய்பவர்கள்தாம்.ஆனால் தமிழறிஞர்களை அழைக்கும் போது அவர்களை முழுமையாக உரை நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தால் தானே. நிறைய தமிழ் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அப்படிச் செய்ய சில வெளிநாட்டு தமிழ்ச் சங்க நிர்வாகிகள்தான் விரும்புகின்றனர்.

ஷார்ஜா விலிருந்து ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தார்.நீங்கள் நெல்லைக்கண்ணன் தானே.தமிழ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றார். தேதி கேட்டேன். சொன்னார். சொல்லி விட்டு அவர் என்னிடம் சொன்னார். அவர் எனக்கு ஒரு மணி நேரம் அளிப்பாராம். நான் பேச வேண்டுமாம்.ஏனென்றால் திரைப்படத் துறையினருக்கு அவர் முக்கியத்துவம் தர வேண்டுமாம்.

அபுதாபியில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார் . பாரதி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். என்னை நெறிப் படுத்துவது எனது வள்ளுவப் பேராசான் என்றால்.இந்த நூற்றாண்டின் சமூகச் சிந்தனையாளன் பாரதி என் ஆசிரியன். மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டேன்.

அடுத்து அவர் சொன்னார் நான் மிகவும் மதிக்கின்ற் வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா வருவதாகவும். அவர் இசை நிகழ்ச்சிக்கு முன்னர் நான் ஒரு மணி நேரம் பேச் வேண்டும் என்று. என்ன சொல்வது.வெளி நாடு வாழ் தமிழர்கள் செலவு செய்து நம்மை அழைக்கும் போது முழுமையாக ஒரு உரை நிகழ்த்தினால் தானே அவர்களுக்கும் நிறைவு. நமக்கும் நிறைவு.அவர்கள் தமிழை இரண்டாவது இடத்தில் தான் வைத்துப் பார்க்கின்றனர்.

தமிழ் நாட்டில் நான் மூன்று மணி நேரத்திற்குக் குறைவாக உரை நிகழ்த்தினால் என்னோடு வருத்தம் கொள்வார்கள்.என்ன அய்யா ஏமாற்றி
விட்டீர்களே என்று. கேட்டால் தானே அவர்களால் உணர முடியும்.

சமீபத்தில் மறைந்த முது பெரும் எழுத்தாளர் அண்ணன் ர.சு.நல்லபெருமாள் அவர் தம் மகன் பாலு அவர்கள் ஹூஸ்டன் நகரில் அமெரிக்காவில் இருக்கின்றவர். அவர்கள் தமிழ்ச்சங்கத்தில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலே அவர்களிடம் பேச என் மீது மிகுந்த அன்பு கொண்ட வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களின் திருமகள் என் அம்மா உமையாள் இராமநாதன் அவர்கள் உறவினர் கண்ணப்பன் அவர்கள் பேசினார்.மே மாதம் 25 26 27ல் நிகழ்ச்சி என்றார். ஏற்றுக் கொண்டேன். அவர்கள் வேறு வழியில் செய்தி தந்தனர். 25 26 ஆகிய தேதிகளில் அவர்கள் எனக்கு 45 நிமிடங்கள் ஒதுக்குவார்களாம். அதில் நான் பேச் வேண்டுமாம். எனக்கு முன்னரும் பின்னரும் திரைப்படக் கலைஞர்கள் பேசுவார்களாம். அவர்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாகி விட்டேன்.
ஏனெனில் இனி வெளி நாட்டு நிகழ்ச்சிகள் என்றால் தமிழுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்வதென்று ஒரு தெளிவான முடிவெடுக்க உதவினார்கள் என்பதனால்.

தமிழ்நாட்டிலேயே இன்னும் உரை நிகழ்த்த வேண்டிய ஊர்கள் பல உள்ளன. என்னைக் கேட்பதற்கு ஆர்வமான தமிழ் ஆர்வலர்களும் ஆயிரக் கணக்கில் இருக்கின்றனர். எல்லாம் வல்ல இறைவனும் என் தமிழ்த் தயும் என்னை உணர வைத்திருக்கின்றனர். மகிழ்ச்சியாக இருக்கின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்

Tuesday, March 20, 2012

மனிதனென வாழ விடு

இல்லாதார்க் குதவுகின்றேன் என்ற எண்ணம்
எனக்கு வரின் நான் என்ன மனிதனாவேன்
பொல்லாத அவ்வெண்ணம் என் மனதில்
புகுந்து விடின் அவமானம் கொண்டழுவேன்
கல்லாதான் போல அங்கு என்னை நானே
கடிந்து கொள்வேன் அய்யகோ அழுது தீர்ப்பேன்
வல்லாளா என் சிவனே என்னை இங்கே
வாழ வைத்தாய் மனிதனென வாழ விடு

Sunday, March 18, 2012

என்றும் வைப்பாய்

கேட்பதன் முன் உதவுகின்ற வகையில் என்னை
கேள் எனவே ஆக்கி வைத்தாய் அனைவருக்கும்
பார்ப்பதற்கு முன் அவரை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை அளித்தெனையே உயர வைத்தாய்
வார்க்கையிலே எனைச் சரியாய் வார்த்து விட்டாய்
வணங்கி நின்றேன் என் இறையே மேலும் மேலும்
பூக்கின்ற மனமதையே அளித்துக் காப்பாய்
புண்ணியன் உன் திருவடியில் என்றும் வைப்பாய்

என்றும் வைப்பாய்

கேட்பதன் முன் உதவுகின்ற வகையில் என்னை
கேள் எனவே ஆக்கி வைத்தாய் அனைவருக்கும்
பார்ப்பதற்கு முன் அவரை உணர்ந்து கொள்ளும்
பக்குவத்தை அளித்தெனையே உயர வைத்தாய்
வார்க்கையிலே எனைச் சரியாய் வார்த்து விட்டாய்
வணங்கி நின்றேன் என் இறையே மேலும் மேலும்
பூக்கின்ற மனமதையே அளித்துக் காப்பாய்
புண்ணியன் உன் திருவடியில் என்றும் வைப்பாய்

Tuesday, March 13, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

சாதி என்றும் மதங்கள் என்று இன்றும் பிரிந்து அழியும் மனித குலத்திற்கு ஒரு மகத்தான செய்தியினைச் சொல்லுகின்றார் கண்ணதாசன்.கர்ணன் தாய் தந்தை யாரென்று அறியாதவன்.அதே அவன் வாழ்க்கையில் அவனுக்குப் பல இடங்களிலே அவமானங்களைத் தருகின்றது.அவனுக்குப் பெண் தந்த மன்னன் அவன் பிறப்பு குறித்து அவமானப் படுத்துகின்றான். கர்ணனின் மனைவி அவனைத் தேற்றுகின்றாள்.அதற்கான பாடல் கே.வி.மகாதேவனின் அருமையான இசையில்.

இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே இறைவன் அருளிச் செய்தது. பாடலில் மூழ்குங்கள்.

எல்லா உயிரினங்களுக்கும் கண்தான் வாழ்க்கை.
கண்ணதாசன் கேட்கின்றார்.

கண்ணுக்குக் குலமேது என்று என்ன கேள்வி.இன்று உலகம் முழுவதும் ஒருவர் கண் இன்னொருவருக்குப் பொருத்தப் படுகின்றது.
அங்கே சாதி உணர்வுகள் இல்லை. மதங்கள் பார்க்கப் படுவதில்லை.
தன் கணவனிடம் அவன் சமூகத்தின் கண் என்கின்றாள். ஆமாம் அவனுக்குக் கண் இருப்பதனாலே தான்கொடுத்துக்கொண்டேயிருக்கின்றாண்..

அடுத்த கேள்வி கருணைக்கு இனமேது எங்கே பதில் சொல்லிப் பருங்கள்.உயிர்களிடத்தில் அன்பு கொள்கின்ற பெரு மனமாம் கருணை என்ன இனத்தைச் சார்ந்தது.

விண்ணுக்குள் பிரிவேது விளக்குக்கு இருளேது என்கின்றார்.விண்ணுக்குள் விஞ்ஞான பிரிவுகள் சொல்ல முயலலாமே ஒழிய ஏது பிரிவு. அடுத்த கேள்வி விளக்குக்கு இருளேது. எத்தனை சிந்தனைத் திறன் கொண்ட கேள்வி இது.

பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும் வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும். ஒருவனை அந்தக் காலத்தில் சத்திரியன் என்று அழைப்பதே அவன் வீரத்தை வைத்தே. அதனால்தான் பரசுராமரே அவனை சத்திரியன் என்று உணர்கின்றார். அவனிடமும் கேட்டதன் வாயிலாக அவனுக்கு ஒரு ஆறுதலும் தருகின்றார். சாமர்த்தியமாக வேறு யாரையோ புகழுவதற்காக கண்ணதாசனின் திரைப்
படப் பாடல்களை யாராவது இழிவு படுத்த நினைத்தால் அவர்கள் என்னவென்று அழைப்பது.

Monday, March 12, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே


நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ


தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்
என்று கவியரங்கங்களில் அன்னை தமிழை அழகுறப் போற்றிய கவிஞர்


திருவிளையாடல் திரைப் படத்தில் தமிழாம் தாயை உயர்த்துகின்ற் பாங்கு அவருக்கே உரியது. ஆமாம்.

வட நாட்டுப் பாடகர் ஹேமநாதனை எதிர்த்துப் பாட பாணபத்திரருக்கு பாண்டியன் உத்தரவிட பாணபத்திரர் சொக்கநாதப் பெருமான் முன்னர் நின்று இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று பாடும் பாடலில் கவிஞர் தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ என்று ஒரு கேள்வியை முன் வைத்து எம் பெருமான் சிவனுக்கே தாய் தமிழ் என்று பெருமைப் படுத்துவார்.

அதே திரைப் படத்தில் அவ்வை தமிழ்க் கடவுள் முருகனிடம் ஆறுவது சினம் என்று சொல்லி விட்டு கூறுவது தமிழ் என்றும் சொல்லுவாள் மிகவும் உச்சமாக அந்தப் பாடலில் இறுதியில் உன் தத்துவம் தவறென்று சொல்லிட அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு என்பாள்
அவ்வையின் வாயிலாக கவிஞர் தமிழ்த்தாய்க்கு தரும் பெருமை இது

வென்றான்

தானே தனக்குப் பட்டம் போடா
தனிப் பெருங் கவிஞனவன்
தமிழாள் தானே தேடிக் கண்டு
தழுவிய ஞான மகன்
ஊனமென்பதை உள்ளம் கொள்ளா
உத்தமப் பேரறிஞன்
உலகை உணர்த்தும் பாடல்கள் அளித்த
உயர் ரகச் சித்த னவன்
கானம் அனைத்தும் செம்மையுறச் செய்த
கவிஞரில் மேதையவன்
கடவுள் விரும்பும் கனித் தமிழ்ப் பாடல்
கனிந்திடத் தந்த மகன்
தேனாம் தமிழை வானவர் அருந்திடத்
தேடியே கொண்டு சென்றார்
தெள்ளு தமிழ் அன்னை விண்ணையும் ஆண்டிட
தேர்ந்தங்கு சென்று வென்றான்

Sunday, March 11, 2012

கண்ணதாசனைப் பற்றி

அன்புடையீர் வாழ்க தமிழுடன்.
எனது அன்பு நண்பர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் கடந்த மாதம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கண்ணதாசன் அவர்களைப் பற்றி உரையாற்றிய போது அவரது திரைப் படப் பாடல்கள் யாவுமே பழைய இலக்கியங்களின் சாறு என்பது போலப் பேசியதாக அவர் ஆசிரியராக உள்ள தினமனி நாளிதழில் செய்தி கண்டேன்.அது எத்தனை பெரிய தவறு என்பதனை எனது உள்ளம் எனக்கு உணர்த்தியதாலே கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள் எத்தனை சிறந்தவை என்பதனை உணர்த்தும் வண்ணம் தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன். இறையருள் கூட்டுவித்தால் நாளைக்கே தொடங்கலாம் என்று இருக்கின்றேன். நன்றி அனைவருக்கும் அன்புடன் நெல்லைகண்ணன்

Saturday, March 10, 2012

கொடுமையன்றோ

தந்தையரைக் கொல்லுகின்ற பிள்ளைகளும்
தாயவரின் உயிர் பறிக்கும் மைந்தர்களும்
மைந்தரையே கொல்லுகின்ற தாய்க்குலமும்
மனைவியையே கொல்லுகின்ற மடையர்களும்
கொண்டவனைக் கொல்லுகின்ற கோமளமும்
குருவினையே கொல்லுகின்ற மாணவரும்
அன்பினையே உணராமல் வளர்ந்ததனால்
அறிவின்றிப் போன ஒரு கொடுமையன்றோ

Thursday, March 8, 2012

மகளிர் நாள்

உலகெங்கும் குழந்தைகளை நாள்கள் தோறும்
உதிரத்தோ டளிக்கின்றார் மகளிர் காண்பீர்
மலர்ந் துலகம் தழைப்பதற்கு மகளிர் செய்யும்
மாபெரிய தியாகம் இது உணர்வீர் நீரே
தினந்தோறும் அவர்களது தினமேயன்றி நீங்கள்
தேர்ந்து தரும் தினமும் அதில் அடக்கமன்றோ
உளம் திருந்தி உணர்ந்திடுவீர் மகளிர்க் கென்றும்
உள்ள நாள் எல்லாமும் அவர்கள் நாளே

வாழ்ந்து வெல்வோம்

அன்பு செய்ய வருகின்றார் அதிரடியாய்
அடுத்த நாளே தனை மாற்றிக் கொள்கின்றாரே
பண்பு வழி அவரிடத்தும் அன்பு வைத்து
பதை பதைத்து துன்புறுதல் நம் கடனா
அன்பு நந்தம் கொள்கை அதைக் கை விடுதல்
அறிவுடைய செயலில்லை தமிழாள் சொன்னாள்
தெம்புடனே அன்பு செய்வோம் மனிதராக
திருக்குறளார் தம் வழியே வாழ்ந்து வெல்வோம்

இருக்கின்றானே

ஆயிரம் பல்லாயிரமாய் நூற்கள் கற்றேன்
அதன் வழியாய் வாழ்வதற்கும் கற்றுக் கொண்டேன்
பாவி இந்த மனிதர்களைப் படித்துப் பார்த்தும்
பல பேரைப் படிப்பதற்கு முடிவதில்லை
கோயிலிலே இருக்கின்றான் இறைவன் என்ற
கூற்றை நான் நம்புவதே யில்லை அய்யா
தாவி இங்கு அன்பு செய்யும் மனிதர் தம்மின்
தலைவாசல் தோறும் இறை இருக்கின்றானே

Tuesday, March 6, 2012

ஆளாக்காதீர்

பணமதுவும் குலைத்து விடும் மிகச் சிறந்த
பண்புகளை நேர்மையினை நாணயத்தை
குணமதுவோ நல்லதெல்லாம் கொண்டிருக்கும்
கூட்டாக்கும் நல்லவரைப் பெரியவரை
இனம் பிரித்துத் தமிழ் இதனை சொல்லி வைத்தும்
எப்படியோ விதி வழியால் மறந்து போனேன்
மனம் துடிக்க இறைவனிடம் வேண்டுகின்றேன்
மறு முறை இத் தவறுக்கு ஆளாக்காதீர்

Sunday, March 4, 2012

அருளிடுக தலைவா

அன்பு செய்வார் மட்டும் தான் உயிரொ டுள்ளார்
அதுவன்றி வாழ்பவரோ உடலாய் உள்ளார்
என்றெனக்கு வள்ளுவனார் சொல்லித் தந்த
எழில் வழியை உணர்ந்தவனாய் வாழுகின்றேன்
அன்பதனால் உலகதனில் பல பேர் என்னை
அப்பா என்றழைக்கின்றார் பாசம் கொட்டி
தெம்பாக நான் வாழ வழி செய்கின்றார்
தேம்புகின்றேன் அவர் செய்யும் அன்பின் முன்னால்

அவசரமாய் அன்பு காட்டி அதே வேகத்தில்
அவசரமாய் விலகுகின்றார் புரியவில்லை
தவம் போல அன்பு செய்யும் என்னைக் கூட
தவறாக உணருகின்றார் என்ன செய்வேன்
குவலயத்தில் இது என்ன துன்பம் என்னை
கொள்க அன்பு என்று சொன்ன இறைவா
அவருளத்தில் அன்பு தன்னை உணரும் ந்ல்
அழகு தன்னை அருளிடுக தலைவா